Last Updated:
டாப் 2 இடங்களுக்குள் போட்டியை நிறைவு செய்யும் அணி எது என்பதில் குஜராத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையே போட்டி ஏற்பட்டிருக்கிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஐபிஎல் தொடரிலிருந்து லக்னோ அணி ஏற்கனவே வெளியேறியுள்ள நிலையில், இந்த ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு மிக முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. ஐபிஎல் நடப்பு சீசனில் கடைசியாக நடைபெறும் லீக் போட்டி இன்றைய ஆட்டம் என்பது கவனிக்கத்தக்கது.
அடுத்ததாக ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுகள் தொடங்கிவிடும். தற்போதைய நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ அணியை தவிர்த்து மற்ற 8 அணிகளும் லீக் சுற்றில் அனைத்து போட்டிகளையும் முடித்துள்ளன. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணி லீக் சுற்றில் டாப் 2 இடங்களுக்குள் போட்டியை நிறைவு செய்யும்.
இரண்டாவது இடத்தில் தற்போது குஜராத் அணி உள்ளது. மூன்றாவது இடத்தில் ஆர்சிபியும், நான்காவது இடத்தில் மும்பை அணியும் உள்ளது. மும்பை அணி நான்காவது இடத்தில் இருந்து மாற்றம் அடையாது. தற்போது டாப் 2 இடங்களுக்குள் போட்டியை நிறைவு செய்யும் அணி எது என்பதில் குஜராத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையே போட்டி ஏற்பட்டிருக்கிறது.
இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு வெற்றி பெற்றால் தரவரிசையில் முதல் அல்லது இரண்டாம் இடத்திற்கு முன்னேறிவிடும். அதன் மூலம் பிளே ஆஃப் சுற்றில் குவாலிபயர் 1 போட்டிக்கு ஆர்சிபி தகுதி பெறும் என்பதால் இன்றைய ஆட்டம் அந்த அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
குவாலிபயர் 1 போட்டியில் லீக் சுற்றில் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் மோதும். அதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும். தோல்வியடையும் அணி எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்ற அணியுடன் குவாலிஃபயர் 2 போட்டியில் மோதும்.
இன்றைய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி இந்திய நேரப்படி 7.30 மணி அளவில் தொடங்குகிறது. லக்னோ அணி தனது கடைசி போட்டியில் குஜராத்தை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது என்பது கவனிக்கத்தக்கது.


