Last Updated:
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த அஜித், ரூ. 1,00,13,56,00,00,01,39,54,21,00,23,56,00,00,01,39,542 கொண்டு எலான் மஸ்க்கை முந்தி உலகின் முதல் பணக்காரராக சில மணி நேரங்கள் இருந்தார்.
உத்தரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸைச் சேர்ந்தவர் அஜித். இவர் கடந்த மாதம் ஒரு நாள் தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 1,800 ஒரு முறையும், ரூ. 1,400 ஒரு முறையும் எடுத்துள்ளார். அதன்பின் அவரது வங்கிக் கணக்கிற்கு ரூ. 1,00,13,56,00,00,01,39,54,21,00,23,56,00,00,01,39,542. பணம் வந்துள்ளது. இதனைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த நிமிடத்தில் அஜித்தின் பண இருப்பு, உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க்கின் சொத்து மதிப்புக்கு மேல் இருந்தது.
இவ்வுளவு பணம் எங்கிருந்து வந்தது? யார் அனுப்பினார்கள்? இதை நினைத்து சந்தோஷப்படவா அல்லது பயப்படவா என்றே அஜித்திற்கு தெரியவில்லை. நம்பமுடியாத அளவிற்கு பணம் வரவு வைக்கப்பட்டது குறித்து அஜித்தின் குடும்பத்தினர் ஆரம்பத்தில் மகிழ்ச்சியடைந்தாலும், ஒருவேளை பண மோசடியில் ஈடுபடுபவர்கள் அவரது கணக்கை குறிவைத்திருக்கலாம் என்றும் அஞ்சினர். பின்னர் அஜித் தனது வங்கியைத் தொடர்பு கொண்டு நடந்த விபரங்களைக் கூறி, இதற்கான காரணம் என்ன என்பதைக் கேட்டறிந்தார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள வங்கியின் ஒரு கிளையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் எதிர்பாராத தொகை அவரது கணக்கில் கிரெடிட் செய்யப்பட்டதாக வங்கி அஜித்திடம் கூறியது. பின்னர் அஜித் காவல்துறையை அணுகி உத்தரபிரதேச சைபர் கிரைம் பிரிவில் இதுகுறித்து புகார் பதிவு செய்தார்.
இந்த வழக்கு தொடர்பாக உத்தரபிரதேச மாநில சைபர் கிரைம் பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, விசாரணையின் ஒரு பகுதியாக அஜித்தின் வங்கிக் கணக்கு எந்தப் பணப் பரிவர்த்தனையும் செய்ய முடியாத வகையில் அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளது.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் போன்ற நிறுவனங்களின் உரிமையாளரும் உலக பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சுமார் ரூ.3,07,00,00,00,00,000 ஆகும். இந்த தொகையே வெறும் 14 இலக்கங்கள் மட்டுமே. ஆனால் அஜித்தின் வங்கி கணக்கிற்கு வந்த தொகை 36 இலக்கங்கள் கொண்டது என்றால் எவ்வுளவு பணம் என்று கணக்கிட்டு கொள்ளுங்கள். சொல்லபோனால் சில மணி நேரங்கள் எலான் மஸ்கை விட உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த அஜித் உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருந்துள்ளார்.
எலான் மஸ்க்கை ஓரங்கட்டி உலகின் முதல் பணக்காரரான உ.பி. நபர்! விசாரித்தபோது தெரியவந்த அதிர்ச்சி


