Last Updated:
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக 12 பேர் கைதான நிலையில், அதில் பஞ்சாபை சேர்ந்த பெண் ரூ.60,000 பெற்றுக்கொண்டதாக உறுதியாகியுள்ளது.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைதான பெண் அதற்காக அந்நாட்டு அதிகாரியிடம் 60 ஆயிரம் ரூபாய் பெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பிரபல யூடியூபர் உள்பட 12 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியாவில் இருந்து கொண்டு சிலர் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதனடிப்படையில் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தவர்களை குறிவைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தில் இருந்து இரண்டு பெண்கள் உட்பட இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதில் 6 பேர் பஞ்சாப் மாநிலத்தில் இருந்தும், 4 பேர் ஹரியானாவில் இருந்தும், ஒருவர் உத்தரபிரதேசத்தில் இருந்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 12 பேரில் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட பெரும்பாலானோர், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய டேனிஷ் என்பவருடன் நெருக்கமாக பழகி வந்ததும் அவரது பரிந்துரையின்படி, பாகிஸ்தானுக்கும் சென்று வந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
குறிப்பாக பஞ்சாப்பை சேர்ந்த குசாலா என்ற பெண்மணி இந்திய ராணுவத்தின் நடமாட்டம் பற்றி தகவல்களை பாகிஸ்தானிய அதிகாரிகளிடம் பகிர்ந்து கொண்டதும், இதற்காக அவருக்கு யுபிஐ மூலம் இரண்டு தவணைகளாக மொத்தம் 30 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்த உளவு பார்த்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்புள்ளதா என அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


