Last Updated:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்த வர்த்தகத்தை பயன்படுத்தியதாக கூறினார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத இலக்குகளை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. இதைத்தொடர்ந்து எல்லையில் இரு நாட்டுப் படைகள் நேரடி மோதலில் ஈடுபட்டதால் போர் பதற்றம் நிலவியது. இந்திய ராணுவத்தின் பதிலடியில் நிலைகுலைந்த பாகிஸ்தான், சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. இரு நாட்டு ராணுவ தளபதிகள் இடையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டிய நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன.
இதனால், இரு நாட்டு எல்லையோரத்தில் அமைதி திரும்பியது. இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் ராணுவத் தலைமை இயக்குநர்கள் இடையே இன்று பேச்சுவார்த்தையும் நடைபெற்று முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்நிலையில் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், இந்தியா – பாகிஸ்தான் சண்டையை எப்படி நிறுத்தினேன் என விளக்கியுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது; “நாங்கள் நிறைய உதவிகளை செய்துள்ளோம். அதேபோல் வர்த்தகத்திலும் உதவி செய்துள்ளோம். இருநாட்டிடமும், நாங்கள் உங்களுடன் நிறைய வர்த்தகம் செய்ய இருக்கிறோம். போரை நிறுத்தினால் வர்த்தகம் செய்வோம். இல்லை என்றால் உங்களுடன் வர்த்தகம் செய்யமாட்டோம் எனத் தெரிவித்து இரு நாட்டின் போரை நிறுத்தினேன். வர்த்தகத்தை நான் பயன்படுத்தியதுபோல் வேறு யாரும் பயன்படுத்திருக்க மாட்டார்கள். உடனே அவர்கள் தங்கள் சண்டை நிறுத்துவதாக அறிவித்தார்கள்.
அது ஒரு மோசமான அணு ஆயுதப் போராக இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். மில்லியன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம். ஆனால், அந்த அணு ஆயுத மோதலை நாங்கள் நிறுத்திவிட்டோம். இதற்காக துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் மற்றும் வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோரின் பணிக்காகவும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
நாங்கள் பாகிஸ்தானுடன் நிறைய வர்த்தகம் செய்யப் போகிறோம். இந்தியாவுடன் நிறைய வர்த்தகம் செய்யப் போகிறோம். நாங்கள் இப்போது இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.


