Last Updated:
Transgender Inspiring Story| மாட்டு பண்ணை வைத்து தன்னம்பிக்கையால் உயர்ந்த திருநங்கை பற்றிய செய்தி தொகுப்பு இங்கு காணலாம்.
சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியில் சுயமாக மாட்டுப்பண்ணை நடத்தி வருமானம் ஈட்டி வருகிறார் திருநங்கை பூஜா. கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் பங்கேற்க இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான திருநங்கைகள் வருகை தர உள்ளனர்.
அவர்களை மகிழ்விக்கும் வகையில் தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பு சார்பில் வருகிற 12-ந் தேதி 25-ம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் மிஸ் கூவாகம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறவுள்ளது. அழகிப்போட்டிக்கான முதல் சுற்று காலை 10 மணிக்கு விழுப்புரம் ஆஞ்சநேயா திருமண மண்டபத்திலும், மாலை 7 மணிக்கு இறுதிச்சுற்று போட்டி, புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலிலும் நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் சாதனை புரிந்த பல திருநங்கைகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு விருதுகளும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் சென்னை பகுதியை சேர்ந்த பூஜா என்ற திருநங்கை “மாட்டுப் பண்ணை” மூலம் சுயமாக தொழில் செய்து வருகிறார். படித்தது பதினொன்றாம் வகுப்பு தான். திருநங்கையாக பிறந்து விட்டால் பாலியல் தொழிலுக்கு தான் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை உடைத்து நாங்களும் சுயதொழில் செய்து சாதனைப் புரியும் என்று எண்ணி தனக்கு கீழ் ஒரு பத்து திருநங்கைகளை வைத்து ஒரு குழுவாக செயல்பட்டு வருகிறார்கள்.
தங்களுக்கு அரசின் சில நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டதாக திருநங்கை பூஜா தெரிவித்தார். முதலில் எங்களிடமிருந்து பால் வாங்குவதற்கு அப்பகுதி மக்கள் தயங்கினார்கள். பல ஏற்ற இறக்கங்களை வாழ்க்கையில் நாங்கள் சந்திக்க நேரிட்டதாக வேதனை கலந்த உண்மையை விளக்கினார். இருந்த போதிலும் எங்களுடைய தன்னம்பிக்கையை கைவிடாமல் யார் எங்களிடம் பால் வாங்க மறுத்தார்களோ, அவர்களே தற்போது எங்களிடம் பால் வாங்கி செல்கிறார்கள் எனவும், சுற்றுவட்டார பகுதியில் நாங்கள் தான் பால் விநியோகம் செய்கிறோம் எனவும், தங்களுக்கு பொதுமக்கள் நல்ல ஆதரவு தருவதால் எந்த ஒரு மன உளைச்சலும் இல்லாமல் மன நிம்மதியாக இந்த வேலை செய்து, போதுமான வருமானத்தை ஈட்டி வருவதாக திருநங்கை பூஜா தெரிவித்தார்.

