Last Updated:
குறிப்பிட்ட அளவு அந்நிய செலாவணி இருப்பில் இருந்தால்தான் இந்தியாவால் எளிதாக இறக்குமதி செய்ய முடியும்.
கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்திருப்பதாக ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கச்சா எண்ணெய், தங்கம், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை இந்தியா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. அவ்வாறு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான பணத்தை இந்தியா டாலரில்தான் செலுத்த வேண்டும்.
அதற்காக குறிப்பிட்ட அளவு அந்நிய செலாவணி இருப்பில் இருந்தால்தான் இந்தியாவால் எளிதாக இறக்குமதி செய்ய முடியும். ஒவ்வொரு நாடுகளும் அந்நிய செலாவணியை ஒரு குறிப்பிட்ட அளவு இருப்பு வைத்துக் கொண்டே இருக்கும். இது அந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு பலமாக அமையும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியாவுடைய அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவின் அந்நிய செலாவணி 688 பில்லியன் டாலராக உயர்ந்திருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இந்தியாவுடைய அந்நிய செலாவணி கையிருப்பு உயர்ந்திருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.
இந்தியா கையிருப்பு வைத்திருக்கும் அந்நிய செலாவணி மதிப்புகளில் அமெரிக்க டாலர், யூரோ, ஜப்பானின் யென், தங்கம், அரசு மற்றும் கடன் பத்திரங்கள் உள்ளிட்டவை அடங்கும். அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்திருப்பது இந்திய பொருளாதாரம் வலுவாக இருப்பதற்கான அறிகுறி என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
6 மாதங்களில் இல்லாத அளவுக்கு அந்நிய செலாவணி கையிருப்பு உயர்வு.. முக்கிய தகவலை வெளியிட்டது ரிசர்வ் வங்கி


