Last Updated:
தான் பாகிஸ்தான் அணிக்காக களமிறங்கியதை “Playing it My Way” புத்தகத்தில் சச்சின் டெண்டுல்கர் விவரித்துள்ளார்.
கிரிக்கெட்டின் கடவுள் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியில் விளையாடுவதற்கு முன்பாக பாகிஸ்தான் அணியில் விளையாடியுள்ளார் என்று உங்களுக்கு தெரியுமா?
மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் 1989 ஆம் ஆண்டு 16 வயதில் பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். ஆனால் அதற்கு முன்பாக பாகிஸ்தான் அணிக்காக அவர் விளையாடியுள்ளார் என்பது பலருக்கும் தெரியாத தகவலாகவே இருக்கும்.
1987 ஜனவரி 20 அன்று இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஒரு போட்டியில், பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வெடுப்பதற்காக மீண்டும் ஹோட்டலுக்கு சென்றுவிட்டனர். இதனால் பாகிஸ்தான் அணியில் பீல்டர்கள் குறைவாக இருந்தார்கள்.
அப்போது சிசிஐ கேப்டனாக இருந்த ஹேமந்த் கென்க்ரேவிடம், தனக்கு வீரர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், மூன்று அல்லது நான்கு வீரர்களை பீல்டிங் செய்ய சொல்ல முடியுமா என்று கேட்டார். இம்ரான் கான் இதை கேட்டபோது குஷ்ரு வாசனியா மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகிய 2 இளம் வீரர்கள் ஹேமந்த்க்கு அருகில் இருந்தனர்.
இம்ரான் கான் இதை கேட்ட உடன், ஹேமந்தை பார்த்து சச்சின் டெண்டுல்கர், “நான் போகவா” என்று கேட்டுள்ளார். ஹேமந்தும் சரி என்று சொல்ல, சுமார் 25 நிமிடங்கள் பாகிஸ்தான் அணிக்காக பீல்டிங் செய்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
அவர் பீல்டிங் செய்தபோது, கபில் தேவ் அடித்த ஒரு பந்தை தவறவிட்டதாக சச்சின் டெண்டுல்கர் தனது “Playing it My Way” புத்தகத்தில் விவரித்துள்ளார். தன்னை மிட்-ஆன் இடத்தில் நிற்க வைத்திருந்தால் அந்த கேட்சை பிடித்திருப்பேன் என்றும், தவறான இடத்தில் இருந்ததால், நீண்ட தூரம் ஓடியும் அந்த கேட்சை தன்னால் பிடிக்க முடியவில்லை என்று சச்சின் டெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார்.
April 29, 2025 12:17 PM IST


