Last Updated:
வரும் டிசம்பர் மாதத்தில் ரீசார்ஜ் திட்டங்களுக்கான கட்டணங்களை பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த சில தகவல்களை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
தொலைத் தொடர்பு சேவைகளை அனுபவிப்பதற்கு இந்திய வாடிக்கையாளர்கள் இனி சற்று கூடுதலாக பணம் செலவு செய்ய வேண்டி இருக்கும்.
பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா போன்ற தொலை தொடர்பு ஆபரேட்டர்கள் இந்த ஆண்டின் இறுதியில் தங்களுடைய வருமானத்தை அதிகப்படுத்துவதற்கு ரீசார்ஜ் திட்டங்களுக்கு விலை உயர்வை அறிமுகப்படுத்த உள்ளனர். ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் தங்களுடைய நிலைகளை வலுப்படுத்தி, மார்க்கெட்டில் மிகப்பெரிய பங்கு மதிப்பை பெற்று வருகின்றனர். இதனால் சந்தை முன்பை விட தற்போது அதிக அளவில் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.
2025 இல் கட்டண உயர்வு: Bernstein என்ற உலகளாவிய தரகு நிறுவனம் வெளியிட்ட ஆய்வின் அடிப்படையில், இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு வழங்குனர்கள் டிசம்பர் 2025 -க்குள் கட்டணங்களை 10% முதல் 20% அதிகரிக்க கூடும் என்று சொல்லப்படுகிறது. கடந்த 6 வருடங்களில் இது மூன்றாவது மிகப்பெரிய கட்டண உயர்வாக இருக்கும். சமீபத்தில் ஜூலை 2024 -இல் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களுடைய கட்டணங்களை 25% அதிகரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டண உயர்வு 4G -ஐ வலுப்படுத்துவதற்கும் 5G தொழில்நுட்பத்தை விரிவுப்படுத்துவதற்கும் என்று சொல்லப்பட்டது.
சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து நிலையான முறையில் அதிகரித்து, ஒரு யூசருக்கான சராசரி வருமானம் வளர்ச்சி வலுப்பெற்று வருவதாலும் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் 2025 – 27 காலகட்டத்தில் அதிக அளவு வருமான வளர்ச்சியை அடைவார்கள் என்று தரகு நிறுவனம் கூறுகிறது. புதிய கஸ்டமர்களை அதிகரிப்பதற்கான முயற்சியை மட்டுமே நம்பி இருக்காமல், ஏற்கனவே இருக்கும் யூசர்களிடமிருந்து அதிக வருமானத்தை ஈட்டுவதற்கான மேம்பாடுகளில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
அதே சமயத்தில் வோடபோன் ஐடியா நிறுவனம் ஒரு சில பிரச்சனைகளை சந்தித்து வந்தாலும் அவர்களுடைய பங்கு மதிப்பு 22.6% -இல் இருந்து 48.99 சதவீதமாக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 2025 -இல் 15 சதவீத கட்டண உயர்வு இருக்கும் என்று தரகு நிறுவனம் எதிர்பார்க்கிறது. அதன் பிறகு 2026 முதல் 2033 வரை ஆண்டுவாரியாக கட்டண உயர்வுகளை எதிர்பார்க்கலாம் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. இது மாதிரியான கட்டண உயர்வு மூலமாக தொலைதொடர்பு நிறுவனங்கள் 10% அதிக ஆண்டு வாரியான வளர்ச்சி விகிதத்தை அடைந்து வருகின்றனர் என்று கூறுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
April 25, 2025 12:04 PM IST


