Last Updated:
பிசிசிஐ துணைத் தலைவர் ராஜிவ் ஷுக்லா, பாகிஸ்தானுடன் இருதரப்பு போட்டிகள் நடைபெறாது என உறுதிப்படுத்தியுள்ளார்
இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இருதரப்பு போட்டிகள் நடைபெறாது என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜிவ் ஷுக்லா தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் காஷ்மீர் பகுதியில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான இருதரப்பு கிரிக்கெட் போட்டி நடைபெறாது என பிசிசிஐ துணை தலைவர் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார்.
கடந்த 2012-13 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு கிரிக்கெட் போட்டி நடைபெறவில்லை. அந்த ஆண்டில் பாகிஸ்தான் அணி இந்தியா வந்து ஒருநாள் தொடரை விளையாடியது. இந்திய அணி 2008 ஆம் ஆண்டிற்கு பிறகு பாகிஸ்தான் செல்லவில்லை. ஆனால் ஐசிசி தொடர்களில் மட்டும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகிறது.
இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, பிசிசிஐ துணை தலைவர் ராஜிவ் ஷுக்லா தெரிவித்ததாவது, “நாங்கள் பாதிக்கப்பட்டவர்களுடன் உள்ளோம். மேலும் இந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். எங்கள் அரசாங்கம் என்ன சொல்கிறதோ அதை செய்வோம். எங்கள் அரசாங்கம் முடிவின் காரணமாகத்தான் பாகிஸ்தான் அணியுடன் இருதரப்பு கிரிக்கெட் போட்டியில் விளையாட மறுக்கிறோம். ஐசிசி தொடர்களில் மட்டும் விளையாடி வருகிறோம். என்ன நடக்கிறது என்று ஐசிசிக்கும் தெரியும்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: மதங்களை கடந்த மனிதநேயம்..! தீவிரவாதிகளுக்கு அன்பின் மூலம் பதிலடி கொடுத்த ரியல் ஹீரோக்கள்
மேலும் இதுகுறித்து தெரிவித்துள்ள பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, “பஹல்காமில் ஏற்பட்ட தாக்குதலால் கிரிக்கெட் சமூகமே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. பிசிசிஐ தரப்பில் இந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு கண்டனத்தை தெரிவித்துக்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்கள் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – மும்பை இந்தியன்ஸ் போட்டிக்கு முன்னர் இரு அணிகளின் கேப்டன்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்துக்கொண்டனர். மேலும் போட்டி தொடங்குவதற்கு முன்னர் 1 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
April 24, 2025 2:18 PM IST


