Last Updated:
சென்னையில் பிரேசில் ஜாம்பவான்கள் கலந்து கொண்ட கால்பந்து காட்சிப் போட்டியில், ரொனால்டினோ தலைமையிலான பிரேசில் லெஜண்ட்ஸ், ஐஎம்.விஜயன் தலைமையிலான இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணியை 2-1 என்ற கணக்கில் வென்றது.
சென்னையில் பிரேசில் ஜாம்பவான்கள் கலந்து கொண்ட கால்பந்து காட்சிப் போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். பிரபலங்களும், கால்பந்து ரசிகர்கள் போட்டியை உற்சாகமாக கண்டுகளித்தனர்.
சென்னையில் நடைபெறும் சர்வதேச அளவிலான கால்பந்து உச்சிமாநாட்டையொட்டி, நேரு உள்விளையாட்டரங்கில் கால்பந்து காட்சிப் போட்டி நடைபெற்றது. இதில், 2002-இல் கால்பந்து உலகக் கோப்பையை வென்ற பிரேசில் அணி வீரர்கள், ஜாம்பவான் ரொனால்டினோ தலைமையில் பிரேசில் லெஜண்ட்ஸ் அணியாகவும், இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், விஜய் நடித்து பிகில் படத்தில் வில்லனாக நடித்திருந்தவருமான ஐஎம்.விஜயன் தலைமையில் முன்னாள் வீரர்கள் அடங்கிய இந்தியா ஆல் ஸ்டார் அணியும் விளையாடின.
கால்பந்து என்றாலே ரசிகர்களுக்கு சட்டென நினைவுக்கு வரும் பிரேசில் அணியின் உலகப்புகழ் பெற்ற வீரர்களான ரொனால்டினோ, ரிவால்டோ உள்ளிட்டோர் சென்னை வருகின்றனர் என்றதுமே கால்பந்து ரசிகர்களிடையே உற்சாகம் தொற்றிக்கொண்டது. இதனால், போட்டியைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். துணை முதலமைச்சர் உதயநிதி போட்டியை தொடங்கி வைத்தார்.
போட்டியில் ஒவ்வொரு கோல் அடித்த போதும் மைதானத்தில் சம்பா நடனம் களைகட்டியது. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில், எதிர்பார்த்தபடியே இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் வெற்றி பெற்ற பிரேசில் லெஜண்ட்ஸ், தற்போதும் தாங்கள் தான் கெத்து என நிரூபித்தனர்!
The most anticipated Brazil Legends Tour kicked off today at the Jawaharlal Nehru Indoor Stadium in Chennai, and I had the privilege of witnessing the exciting exhibition match between the Indian All-Stars and Brazil Legends.
It was a fantastic atmosphere, with fans and football… pic.twitter.com/sQDlz2dZMK— Udhay (@Udhaystalin) March 30, 2025
இந்த போட்டியில் ரிவால்டோவின் ஆட்டம் அரங்கத்தையே அதிரவைத்தது. போட்டியைக் காண நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி, மகன் ஆத்விக்குடன் வந்திருந்தார். ரொனால்டினோவுடன் ஆத்விக் புகைப்படம் எடுத்து மகிழ்ந்த போது, ஆத்விக்கின் தலையில் கோதி ரொனால்டினோ வாழ்த்தினார். இந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டியை அரசியல், சினிமா பிரபலங்கள் பலரும் கண்டுகளித்தனர்.
ரொனால்டினோ போன்ற கால்பந்து ஜாம்பவான்கள் விளையாடுவதை ஒருமுறையாவது பார்ப்போமா என ஏங்கிய ரசிகர்கள், தங்கள் கண்களையே நம்ப முடியாத வகையில் போட்டியை கண்டு ரசித்ததாக குறிப்பிட்டனர். டிவியில் மட்டுமே பார்த்த நட்சத்திரங்கள் சென்னையில் விளையாடியதை பார்த்தது மறக்கமுடியாத அனுபவம் என ரசிகர்கள் உற்சாகமாக தெரிவித்தனர்.
March 31, 2025 7:36 AM IST


