Last Updated:
IPL CSK vs MI | வழக்கமாக ஓப்பனிங்கில் களமிறங்கும் ருதுராஜ் நேற்று தேர்ட் டவுனில் இறங்கினார். மாறாக ரச்சின் ரவீந்திரா உடன் ராகுல் திரிபாதி ஓப்பனிங் செய்தார்.
சென்னையில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ், நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸுடன் மோதியது. டாஸ் ஜெயித்த சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார். கலீல் அகமது வீசிய ஆட்டத்தின் 4-ஆவது பந்தில் ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஐபிஎல் போட்டியில் 18-ஆவது முறை டக் அவுட் ஆன ரோகித், அதிக முறை டக் அவுட் ஆன வீரர்களின் பட்டியலில் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக்குடன் இணைந்து முதலிடத்தில் உள்ளார். தொடர்ந்து துல்லியமான பந்துவீச்சால் மும்பை வீரர்களை திணறடித்த கலீல் அகமது, தனது இரண்டாவது ஓவரில் ரிக்கல்டனை வெளியேற்றினார்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு சிஎஸ்கேவுக்கு திரும்பிய அஸ்வின், தனது முதல் ஓவரிலேயே விக்கெட் எடுத்து ரசிகர்களை குதூகலப்படுத்தினார். இதையடுத்து, கேப்டன் சூர்யகுமார்- திலக் வர்மா ஜோடி அதிரடியாக ரன்களை சேர்த்த நிலையில், தனது ஒவ்வொரு ஓவரிலும் ஒரு விக்கெட் எடுத்த சிஎஸ்கேவின் நூர் அகமது மும்பையின் மிடில் ஆர்டரை தகர்த்து ஆட்டத்தை சிஎஸ்கே பக்கம் திருப்பினார். சூர்யகுமார் பந்தை தவறவிட்ட போது, பூஜ்ஜியம் புள்ளி ஒன்று இரண்டு வினாடிகளில் மின்னல் வேக ஸ்டெம்பிங் செய்த தோனி ரசிகர்களை மிரள வைத்தார். கடைசி நேரத்தில் தீபக் சாஹர் காட்டிய வானவேடிக்கைகளால் மும்பை அணி 20 ஓவர்களில் 155 ரன்களை சேர்த்தது.
இதையடுத்து, மும்பை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறிடித்த சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ், தனது அதிவேக அரைசதத்தை 22 பந்துகளில் கடந்த நிலையில், 53 ரன்களில் ஆட்டமிழந்தார். வழக்கமாக ஓப்பனிங்கில் களமிறங்கும் ருதுராஜ் நேற்று தேர்ட் டவுனில் இறங்கினார். மாறாக ரச்சின் ரவீந்திரா உடன் ராகுல் திரிபாதி ஓப்பனிங் செய்தார். இந்த மாற்றம் ஏன் என்பது குறித்து சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி விளக்கியுள்ளார். அதில், பவர்பிளே ஓவர்களில் திரிபாதியின் ஆக்ரோஷமான பாணியைப் பயன்படுத்த வேண்டும் என்ற விருப்பத்தால் இந்த மாற்றம் செய்யப்பட்டது என்றார்.
தொடர்ந்து ஆட்டத்தின் முடிவில் பேசிய கேப்டன் ருதுராஜ் இந்த மாற்றத்தை பற்றி விளக்கினார். அதில், “அணியின் நலனுக்காக நம்பர் 3-ல் பேட்டிங் ஆட வந்ததாக கூறினார். மேலும், இந்த பேட்டிங் ஆர்டர் தான் அணிக்கு சமநிலையை கொடுக்கிறது. என்னால் நம்பர் 3ல் இறங்கி சிறப்பாக ஆட முடியும். அதேவேளையில் ராகுல் திரிபாதியால் ஓப்பனிங்கில் இறங்கி அதிரடியாகவும் ஆட முடியும்.” என்று வெளிப்படுத்தினார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
March 24, 2025 10:02 AM IST


