Last Updated:
Water Crisis: “வங்கதேசத்தின் வறண்ட ஆறுகள்” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, அரசால் தயாரிக்கப்பட்ட புதிய ஆறுகளின் பட்டியலிலிருந்து தரவுகளை அடிப்படையாகக் கொண்டது.
ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அண்டை நாடான வங்கதேசம், தற்போது மற்றொரு பெரிய சவாலை எதிர்கொள்கிறது. அந்நாட்டில் இருக்கும் ஆறுகளில் குறைந்தது 79 ஆறுகள் வறண்டுவிட்டது என்றும், சில ஆறுகள் வறண்டு போகும் தருவாயில் உள்ளதாகவும் ஆய்வு ஒன்று வெளிப்படுத்தி உள்ளது.
வங்கதேசத்தில் பாயும் 1,156 ஆறுகளில் சுமார் 79 ஆறுகள் சமீபத்தில் முற்றிலும் வறண்டு விட்டன அல்லது வறண்டு போகும் நிலையில் உள்ளன. இது நாட்டு மக்களின் வாழ்வாதாரம் மற்றும் விவசாயத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக சமீபத்திய ஆய்வு வெளிப்படுத்தி உள்ளது. ஜனவரி 2023 மற்றும் டிசம்பர் 2024-க்கு இடையில் வெளியிடப்பட்ட அரசு தரவு, பல ஆவணங்கள் மற்றும் செய்தித்தாள் அறிக்கைகளின் அடிப்படையில் நதி மற்றும் டெல்டா ஆராய்ச்சி மையம் (RDRC) சமீபத்திய இந்த ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வில் சில ஆறுகளில் கணிசமான பகுதி சமீபத்திய ஆண்டுகளில் ஆக்கிரமிப்புகளால் காணாமல் போயுள்ளதாக கவலை தெரிவிக்கப்பட்டு உள்ளது.
RDRC ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ள சில முக்கிய விஷயங்கள் இதோ…
- அணைகள் ஆறுகளின் இயற்கையான ஓட்டத்தை மாற்றியமைத்துள்ளன. இதனால் மில்லியன் கணக்கான வங்கதேச மக்கள் மீன்பிடித்தல், விவசாயம் மற்றும் பொருட்களை கொண்டு செல்வது கடினமாக உள்ளது என்று இந்த ஆய்வு கூறியுள்ளது.
- இந்த ஆறுகளில் நீர்வரத்து என்பது கணிக்க முடியாததாகிவிட்டதால், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் ஆபத்தில் உள்ளது. மேலும் இவற்றைச் சார்ந்திருக்கும் சமூகங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தி செல்ல போராடி வருகின்றன.
- மக்களை தவிர, இந்த பகுதிகளில் உள்ள வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டுவருதாகவும், இயற்கையின் சமநிலை சீர்குலைந்து வருவதாகவும் இந்த ஆய்வு கூறியுள்ளது.
இதனிடையே சுற்றுச்சூழல் ஆலோசகர் சயீதா ரிஸ்வானா ஹசன் கூறுகையில், ஒரு நதி பல காரணங்களால் வறண்டு போகலாம். ஒரு சில ஆறுகள் இயற்கை காரணங்களால் வறண்டு போகின்றன. மனிதர்களின் தேவையற்ற நடவடிக்கைகளால் இவை பாதிக்கப்படுகின்றன. ஏதாவது நடவடிக்கை எடுப்பதற்கு முன், ஒரு நதி வறண்டு போவதற்குப் பின்னால் உள்ள காரணத்தை நாம் ஆராய வேண்டும் என்றார்.
ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான காலித் சைஃபுல்லா பேசுகையில் “வங்கதேசத்தின் வறண்ட ஆறுகள்” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, அரசால் தயாரிக்கப்பட்ட புதிய ஆறுகளின் பட்டியலிலிருந்து தரவுகளை அடிப்படையாகக் கொண்டது என்றார். இதில் நாட்டின் அனைத்து மாவட்ட ஆணையர்களிடமிருந்தும் சேகரிக்கப்பட்ட தகவல்களும் அடங்கும். மேலும், குறைந்தது 79 ஆறுகள் வறண்டு போயுள்ளன அல்லது ஏற்கனவே வறண்டு விட்டன என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.
இவற்றில், குல்னா பிரிவில் 25, ராஜ்ஷாஹியில் 19, ரங்பூரில் 14, சட்டோகிராமில் 6, மைமென்சிங்கில் 5, டாக்காவில் 4, மற்றும் பாரிஷால் மற்றும் சில்ஹெட் பிரிவுகளில் தலா 3 ஆறுகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை குல்னா, சத்கிரா, ராஜ்ஷாஹி மற்றும் குஷ்டியா பகுதிகளில் அமைந்துள்ளன. இங்கு விரைவான நகரமயமாக்கல் இயற்கை நீர் ஓட்டத்தை கடுமையாக பாதித்துள்ளது என்றார்.
March 22, 2025 7:12 AM IST


