மணிக்கு 28 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் வானில் இருந்து பூமிக்கு அசுர வேகத்தில் பறந்து வந்தது, சுமார் ஆயிரத்து 600 டிகிரி செல்சியஸ் அளவிலான வெப்பத்தைத் தாங்கியது எனப் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளது சுனிதா வில்லியம்ஸின் குழு.
அவர்களை அழைத்து வந்த டிராகன் விண்கலம், சுமார் 4 மீட்டர் விட்டத்துடன் 6 மீட்டர் நீளம் கொண்டது. இந்த விண்கலத்துக்குள் 7 பேர் வரை அமர முடியும். அந்த வகையில், சுனிதா மற்றும் புட்ச் வில்மோருடன் கடந்த செப்டம்பர் மாதம் விண்வெளிக்குச் சென்ற நிக், அலெக்சாண்டர் என 4 பேரும் அதிகபட்ச வெப்பத்தைத் தாங்கும் வகையிலான உடையுடன் டிராகன் விண்கலத்தில் பயணம் மேற்கொண்டனர்.
டிராகன் விண்கலம், தனது பூமியை நோக்கிய பயணத்தின்போது பல முறை சுற்ற வேண்டியிருந்த நிலையில், விண்கலத்தில் இருந்து மேல் நோக்கிப் பார்க்கும் வகையில் வீரர்கள் அமர வைக்கப்பட்டிருந்தனர். பயணத்தைத் தொடங்கிய பிறகு, அவர்கள் நகரவோ, அசையவோ முடியாத வகையில், இருக்கைகளுடன் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டிருந்தனர். கைகள், கால்களை மட்டும் நீட்டி மடக்கும் வகையில், அந்த இருக்கை வடிவமைக்கப்பட்டிருந்தது.
விண்கலத்துக்குள் 4 வீரர்களும் தங்களைப் பொருத்திக்கொண்ட பிறகு, இந்திய நேரப்படி 18ஆம் தேதி சரியாக காலை 10.35 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விண்கலம் பிரிக்கப்பட்டது. அதாவது, டீடாக்கிங் செய்யப்பட்டது. பூமியில் இருந்து 420 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து தனது 17 மணி நேர பயணத்தைத் தொடங்கியது விண்கலம்.
தனது மேல் பக்கத்தில் இருந்து கக்கிய நெருப்பு பிழம்புகளின் உந்து விசையைப் பயன்படுத்தி கிடைமட்டமாக நகர்ந்து, புவிவட்டப் பாதையில் விண்கலம் தன்னை நிலைநிறுத்திக்கொண்டது. அதைத் தொடர்ந்து, விண்கலத்துடன் இணைக்கப்பட்டிருந்த தண்டு வடிவிலான இணைப்பு மெல்ல மெல்ல விடுவிக்கப்பட்டு, அதன் எடை படிப்படியாகக் குறைக்கப்பட்டது. மேலும், விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை தொலைவு படிப்படியாகக் குறைக்கப்பட்டது.
அதன் பின்னர், பூமியில் தரையிறங்குவதற்கு ஏதுவாக விண்கலத்தின் நிலை மாற்றப்பட்டு, அதன் அடிப்பகுதி அதிகாலை 2.43 மணிக்கு வெப்பப்படுத்தப்பட்டது. சுமார் 7.5 நிமிடங்களுக்கு ஆயிரத்து 600 டிகிரி செல்சியஸிற்கு விண்கலம் வெப்பப்படுத்தப்பட்டு பிளாஸ்மா உருவாக்கப்பட்டது. அந்த அதிகபட்ச வெப்பம், விண்கலத்தை பூமியின் வளிமண்டலத்துக்குள் வெற்றிகரமாக நுழைய வைத்தது.
அதன் பின்னர், மெக்சிகோவின் வலது பக்கம் மணிக்கு 28 ஆயிரம் கிலோ மீட்டர் என்ற வேகத்தில், அதிவேகமாகக் கீழே பறந்து வந்தது. சுமார் 18 ஆயிரம் அடி உயரத்திற்கு வரும் போது முதன்மையான 2 பாராசூட்டுகள் வெளியே வந்தன. அவை விண்கலத்தின் வேகத்தைக் குறைக்க உதவியது. 6 ஆயிரத்து 500 அடி உயரத்துக்கு வந்த பிறகு மேலும் 4 பாராசூட்டுகள் வெளியே வந்து விண்கலத்தின் வேகத்தை மணிக்கு 27 கிலோ மீட்டராகக் குறைத்தது.
அதன் பிறகு, மெக்சிகோவின் இடது பக்கத்தில் புளோரிடா கடல்பகுதியில் திட்டமிட்டபடி இந்திய நேரப்படி அதிகாலை 3 மணி 27 நிமிடங்களுக்கு வெற்றிகரமாக விண்கலம் தரையிறங்கியது. அங்கிருந்து படகு மூலம் மீட்கப்பட்ட சுனிதா வில்லியம்ஸ், புட்ச் உள்பட 4 பேரும் நாசாவின் ஹூஸ்டன் தலைமையகத்துக்கு அனுப்பப்பட்டனர். அங்கு 45 நாட்களுக்கு மறுவாழ்வு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
March 19, 2025 2:24 PM IST

