Last Updated:
இந்தியா தனது சொந்த உற்பத்தித் துறையை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜோஹோவின் ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தியுள்ளார். அதே நேரத்தில் தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை வலுப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்தியா தனது சொந்த உற்பத்தித் துறையை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜோஹோவின் ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தியுள்ளார். அதே நேரத்தில் தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை வலுப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். பொருளாதார வளர்ச்சிக்கான சீனாவின் படிப்படியான அணுகுமுறையிலிருந்து கற்றுக்கொண்டு அதை இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றுவதன் முக்கியத்துவத்தை வேம்பு தனது சமூக வலைதள பதிவில் எடுத்துரைத்துள்ளார்.
நாம் சீனாவை இன்னும் உன்னிப்பாக உற்றுநோக்க வேண்டும். அவர்களின் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அதை நான் இரண்டு தனித்துவமான கட்டங்களாக வகைப்படுத்துகிறேன் என்று ஸ்ரீதர் வேம்பு தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். முதல் கட்டமாக இந்தியா இறக்குமதியை சார்ந்து இருப்பதற்குப் பதிலாக அதன் சொந்த வீட்டுப் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று அவர் விளக்கியுள்ளார்.
சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உருவாக்கி விரிவுப்படுத்த வேண்டும். இது கடினம் அல்ல; தொலைதூரத்திலிருந்து இறக்குமதி செய்வதை விட மலிவானதாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். இரண்டாவதாக, மதிப்புச் சங்கிலியை மேம்படுத்த தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்துவதாகும். இதை அதிகரிக்க, தொழில்நுட்பத்தின் அனைத்து பகுதிகளிலும் வலுவான மூலோபாய தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும். சீனா 40 ஆண்டுகளுக்கு முன்பு தனது முதல் படியை தொடங்கியது. இப்போது கடந்த 10-15 ஆண்டுகளில் இரண்டாம் கட்டத்தில் தேர்ச்சி பெற்றுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
மாறிவரும் உலகளாவிய சந்தை நிலைமைகள் இருந்தபோதிலும் இந்தியா இந்த வளர்ச்சியை அடைய முடியும் என்று வேம்பு நம்புகிறார். ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சி குறைந்தாலும், இந்தியாவின் உள்நாட்டு சந்தை நமது சொந்த வளர்ச்சியையும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தையும் இயக்க முடியும். எப்படியிருந்தாலும் அது மிகவும் சீரான வளர்ச்சியாகும் என்கிறார்.
பிரின்ஸ்டன் ஆராய்ச்சியாளர் கைல் சான், சீனாவின் தொழில்நுட்ப-தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பின் பகுப்பாய்விற்கு பதிலளிக்கும் விதமாக வேம்புவின் கருத்துக்கள் இருந்தன. இந்த விவாதத்தில், இந்தியா இந்த இரண்டு கட்டங்களையும் தொடர்ச்சியாகவோ அல்லது ஒரே நேரத்தில் பின்பற்ற வேண்டுமா என்று சோசியல் மீடியா வேம்புவிடம் பயனர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்கும் விதமாக, நாம் இரண்டு கட்டங்களையும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டும். இந்தியாவால் இதைச் செய்ய முடியும் என்று வேம்பு தெளிவுப்படுத்தியுள்ளார்.
மேலும், எங்கள் (ஜோஹோ) நிறுவனத்தின் எதிர்காலம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சவாலை நாங்கள் எவ்வளவு சிறப்பாகச் சமாளிக்கிறோம் என்பதைப் பொறுத்தது எனக்கூறிய வேம்பு, சமீபத்தில் ஜோஹோவின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகினார். அதுமட்டுமின்றி இனிமேல் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் கிராமப்புற மேம்பாட்டில் முழுமையாக கவனம் செலுத்தப் போவதாகவும் கூறியுள்ளார்.
March 04, 2025 12:27 PM IST


