Last Updated:
கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்கு அணியின் கேப்டன் சச்சின் சிவா நன்றி தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் சிக்கித் தவித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள், நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி எதிரொலியாக, விமானம் மூலம் சென்னை திரும்ப அரசு ஏற்பாடு செய்துள்ளது.
பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில், தென்னிந்திய அணி சார்பில் தமிழ்நாட்டில் இருந்து மதுரை, சேலம், ராமநாதபுரம், அரியலூர், ஈரோட்டை சேர்ந்த 6 வீரர்கள் மற்றும் ஒரு மேலாளர் ஆகியோர் பங்கேற்றனர்.
போட்டி முடிந்து வாரணாசியில் இருந்து சென்னை திரும்புவதற்கு, கங்கா-காவிரி விரைவு ரயிலில் மூன்றாம் ஏ.சி. வகுப்பில் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால், கும்பமேளாவை ஒட்டி ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக, மாற்றுத்திறனாளி வீரர்களால், ரயிலை நெருங்கக் கூட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அவர்கள் ரயிலை தவறவிட்டு, வாரணாசி ரயில் நிலையத்திலேயே காத்திருந்தனர்.
இது தொடர்பாக நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் செய்தி வெளியான நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர்கள், விமானம் மூலம் சென்னை திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத் ரெட்டி தெரிவித்தார்.
இந்நிலையில், கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்கு அணியின் கேப்டன் சச்சின் சிவா நன்றி தெரிவித்தார்.
இதையும் படிங்க : தமிழ்நாட்டின் லோக் ஆயுக்தா அமைப்பிற்கு தலைவர் நியமனம்.. வெளியான அரசாணை
இந்நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர்களை, மதியம் 1.30 மணிக்கு வாரணாசியில் இருந்து பெங்களூருவிற்கு விமானத்தில் அழைத்துவர டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, பெங்களூருவில் இருந்து இரவு 7.30 மணிக்கு சென்னைக்கு விமானத்தில் புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Varanasi,Uttar Pradesh
February 20, 2025 12:20 PM IST


