Last Updated:
10 நாட்கள் இழுபறிக்குப் பிறகு டெல்லி முதலமைச்சரை பாஜக தேர்வு செய்துள்ளது. டெல்லியின் புதிய முதலமைச்சராக பாஜகவின் ரேகா குப்தா இன்று நண்பகலில் பதவியேற்க உள்ளார்.
10 நாட்கள் இழுபறிக்குப் பிறகு டெல்லி முதலமைச்சரை பாஜக தேர்வு செய்துள்ளது. டெல்லியின் புதிய முதலமைச்சராக பாஜகவின் ரேகா குப்தா இன்று நண்பகலில் பதவியேற்க உள்ளார்.
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது. இதில், 48 இடங்களை கைப்பற்றிய பாஜக, 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது.
யார் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என 10 நாட்களாக குழப்பம் நிலவி வந்த நிலையில், டெல்லியில் மத்திய பார்வையாளர் ரவிசங்கர் பிரசாத் தலைமையில் நடந்த பாஜக எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தில் ரேகா குப்தா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு சக சட்டமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதையும் வாசிக்க: டெல்லி முதல்வர் யார்? ரேஸில் இருக்கும் முக்கிய நபர்கள்
பாஜக அலுவலகம் முன்பு திரண்ட தொண்டர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ரேகா குப்தாவின் இல்லம் முன்பு அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
டெல்லி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட பாஜகவின் ரேகா குப்தா நேற்றிரவு துணைநிலை ஆளுநர் சக்சேனாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அவருடன் பாஜக மத்திய பார்வையாளர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரேகா குப்தா, இந்த வாய்ப்பை தனக்கு வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நண்பகல் 12.30 மணிக்கு துணை நிலை ஆளுநர் புதிய முதலமைச்சர் ரேகா குப்தாவிற்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இவருடன் பர்வேஷ் சாகிப் சிங், ரவீந்தர ராஜ், கபில் மிஸ்ரா உட்பட 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி, டெல்லியில் 25 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
February 20, 2025 6:51 AM IST


