கீவ்:
உக்ரைனின் செர்னோபில் அணுமின் நிலையத்தில் உள்ள உலை மீது, ரஷ்யா, ட்ரோன் தாக்குதல் நடத்தியதற்கு, அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.
‘நேட்டோ’ எனப்படும் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்பில் சேர எதிர்ப்பு தெரிவித்து ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, 2022 முதல் ரஷ்யா போர் தொடுத்து வருகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான சண்டை மூன்றாம் ஆண்டை எட்டவுள்ள நிலையில், அதை நிறுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் பேச்சு நடத்தி வருகின்றன.
அதேசமயம், ரஷ்யாவும், உக்ரைனும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த சூழலில், உக்ரைனின் உள்ள செர்னோபில் அணுமின் நிலையத்தில் பணிகள் கைவிடப்பட்ட நான்காவது அணு உலை மீது, ரஷ்யா நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தி உள்ளது.
சக்தி வாய்ந்த ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் வாயிலாக நடத்தப்பட்ட தாக்குதலில், அங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீ அணைக்கப்பட்டது.
இது குறித்து, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தன் சமூக வலைதளத்தில் கூறியதாவது:
அணு உலையில் உள்ள கதிர்வீச்சுகளில் இருந்து உலகை பாதுகாக்க அமைக்கப்பட்ட தடுப்பு மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அணு உலை கதிர்வீச்சு தடுப்பு அமைப்பு சேதமடைந்தது. அப்பகுதியில் ஏற்பட்ட தீயும் உடனடியாக அணைக்கப்பட்டது.
தற்போதைய சூழலில் கதிர்வீச்சு அளவு அதிகரிக்கவில்லை. இருப்பினும், நிலைமை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.


