Last Updated:
அபிஷேக் சர்மாவின் தந்தை ராஜ்குமார், யுவராஜ் சிங் தனது மகனின் திறமையான ஆட்டத்திற்கு முக்கிய காரணம் என உணர்ச்சிவசப்பட்டு தெரிவித்தார். யுவராஜ் சிங், அபிஷேக்கை சர்வதேச அளவில் சாதிக்க பயிற்சி அளித்தார்.
எங்கள் வாழ்வில் கடவுளைப் போல யுவராஜ் சிங் வந்துள்ளார் என அபிஷேக் சர்மாவின் தந்தை உணர்ச்சிப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் இளம் அதிரடி வீரரான அபிஷேக் சர்மா, ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடியபோது தனது திறமையால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இதன் காரணமாக இந்திய அணியில் இடம் பிடித்த அவர், இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் வெறும் 54 பந்துகளில் 135 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது இந்த அபாரமான பேட்டிங்குக்கு முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் அளித்த பயிற்சியே முக்கிய காரணம் என அபிஷேக்கின் தந்தை ராஜ்குமார் சர்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “என் மகனுக்கு 12 வயதில் இருந்தே கிரிக்கெட்டில் தனித்துவமான திறமை இருந்தது. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் அவன் விளையாடியபோது, நான் டிவியில் தான் பார்த்தேன். அவனது ஆட்டத்தைப் பார்த்து எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. இந்தியாவுக்காக என் மகன் சிறப்பாக விளையாடுவதைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.
“போட்டி முடிந்த பின்னர் அபிஷேக்கை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன். எப்போதுமே அணிக்கு முன்னுரிமை கொடுத்து விளையாட வேண்டும் என்றும் அறிவுறுத்தினேன். என் மகனின் திறமையான ஆட்டத்திற்கு யுவராஜ் சிங் தான் முக்கிய காரணம். அவர் எங்கள் வாழ்க்கையில் கடவுளைப் போல வந்தார்” என உணர்ச்சிவசப்பட்டார்.
“யுவராஜ் சிங்கின் வழிகாட்டுதலால் தான் என் மகன் இவ்வளவு சிறப்பாக விளையாடுகிறார். கொரோனா காலத்தில் சுமார் நான்கு மாதங்கள் யுவராஜ் சிங்கிடம் என் மகன் பயிற்சி பெற்றார். சர்வதேச அளவில் சாதிக்கத் தேவையான அனைத்து நுணுக்கங்களையும் இரவு பகலாக பயிற்சி அளித்து, திறமையான வீரராக அபிஷேக்கை யுவராஜ் சிங் மாற்றியுள்ளார்” எனப் பெருமையுடன் தெரிவித்தார்.
February 06, 2025 4:31 PM IST


