Last Updated:
Maha Kumbh stampede | 1954-ல் தொடங்கி தற்போது நடைபெறும் மகா கும்பமேளா வரை கூட்ட நெரிசல் ஏற்படுவது வழக்கமாக உள்ளதாகவும் பொதுநல வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததற்கு, உத்தரப்பிரதேச மாநில அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
விஷால் திவாரி என்ற வழக்கறிஞர் தொடர்ந்துள்ள இந்த பொதுநல வழக்கில், கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், உத்தரப்பிரதேச மாநில அரசின் நிர்வாக குளறுபடி, அலட்சியம் மற்றும் பாதுகாப்பு குறைப்பாட்டை சுட்டிக்காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து மாநிலங்களும் ஒருங்கிணைந்து பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பொது நல மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, கும்பமேளா நடைபெறும் இடத்தில் அனைத்து மாநிலங்களின் உதவி மையம் இருக்க வேண்டும் என்றும், அதன் மூலம், தங்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் தகவல்களை பக்தர்கள் பெற்றுக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வழிகாட்டு பலகைகள், அடிப்படை தகவல்கள் அனைத்து மொழிகளிலும் இடம்பெற்றிருந்தால், பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து வரும் பக்தர்களுக்கு உதவியாக இருக்கும் என்று பொதுநல மனுவில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
விஐபிகளின் வருகையால், சாதாரண பக்தர்களின் பாதுகாப்பை எவ்விதத்திலும் சமரசம் செய்யக்கூடாது என்று சுட்டிக்காட்டியுள்ள வழக்கறிஞர், கூட்ட நெரிசல் தொடர்பாக உத்தரப்பிரதேச அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடுமாறு குறிப்பிட்டுள்ளார்.
1954-ல் தொடங்கி தற்போது நடைபெறும் மகா கும்பமேளா வரை கூட்ட நெரிசல் ஏற்படுவது வழக்கமாக உள்ளதாகவும் பொதுநல வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
January 30, 2025 11:26 AM IST
Maha Kumbh Stampede | மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் 30 பேர் பலி : உ.பி அரசு பொறுப்பு ஏற்க வேண்டும் – உச்சநீதிமன்றம் சென்ற பொதுநல வழக்கு


