
Last Updated:
ஓய்வை அறிவித்து விடலாம் என்று நினைத்தேன். ஆனால் குடும்பத்தின் நிலைமை காரணமாக என்னால் அதனை செய்ய முடியவில்லை
செஞ்சுரி அடித்த தன்னை அடுத்த போட்டியில் விளையாடுவதற்கு கேப்டனாக இருந்த தோனி வாய்ப்பு அளிக்கவில்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருந்த பேட்ஸ்மேன் மனோஜ் திவாரி இந்திய அணிக்காக 12 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 287 ரன்கள் எடுத்துள்ளார். இதேபோன்று இந்திய அணிக்காக 3 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணியில் இடம் பெற்றிருந்தார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மனோஜ் திவாரி, மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸில் இணைந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு விளையாட்டுத்துறை இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் முன்னாள் கேப்டன் தோனி குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனோஜ் திவாரி கூறியதாவது-
இந்திய அணியின் கேப்டனாக தோனி இருந்தபோது நான் விளையாடினேன். ஒரு போட்டியில் நான் சதம் அடித்தேன். ஆனால் அடுத்த 14 போட்டிகளுக்கு எனக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்திய அணி எப்போதும் கேப்டன் என்ன சொல்கிறாரோ அதன்படி தான் நடக்கும். எல்லாமே கேப்டன் கையில் தான் உள்ளது.
ஆனால் சதம் அடித்த பின்னரும் என்னை எதற்காக அணியிலிருந்து நீக்கினார்கள் என்று எனக்கு தெரியவில்லை. நான் சதம் அடித்த போது என்னை பாராட்டினார்கள். ஆனால் அதன் பின்னர் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் என்னால் போதிய பயிற்சியும் எடுக்க முடியவில்லை. ஓய்வை அறிவித்து விடலாம் என்று நினைத்தேன். ஆனால் குடும்பத்தின் நிலைமை காரணமாக என்னால் அதனை செய்ய முடியவில்லை என்று தெரிவித்தார். தற்போது மனோஜ் திவாரியின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
January 26, 2025 4:30 PM IST

