தீவிர வலதுசாரிகளை பொறுத்தவரை அவர்களது கவலை மஸ்க்குடன் நின்றுவிடவில்லை. காரணம், சமீபத்தில் மெட்டா சிஇஓ மார்ஜ் ஸக்கர்பர்க் மற்றும் ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக் இருவரும் தேர்தலுக்குப் பிறகு டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்து பேசியுள்ளனர். ட்ரம்ப் தனது அமைச்சரவையையும், முதல் 100 நாட்களுக்கான முன்னுரிமைகளையும் கட்டமைக்கும் வேளையில், அவர்கள் தங்களது இருப்பை தக்கவைக்க முனைப்பு காட்டுவதாக தெரிகிறது.
அதிலும் மெட்டா நிறுவனம், வெள்ளை மாளிகையுடன் இணைந்து பணியாற்றும் வகையில் தனது பணியாளர்களை கூட மாற்றி வருகிறது. சமீபத்தில், அந்த நிறுவனம், அதன் உலகளாவிய கொள்கைத் தலைவரும், இங்கிலாந்தின் முன்னாள் துணைப் பிரதமரும், இடதுசாரி சார்புடைய லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் முன்னாள் தலைவருமான நிக் கிளெக்கையும், ஜார்ஜ் டபிள்யூ. புஷ் நிர்வாகத்துடன் தொடர்பில் இருந்த ஜோயல் கப்லானையும் மாற்றுவதாக அறிவித்தது.

சிலிக்கான் பள்ளத்தாக்கும் ட்ரம்ப் ஆதரவாளர்களும் எப்போதும் இயற்கையான கூட்டாளிகளாக இருந்ததில்லை. எந்தவொரு குறுகிய கால கூட்டணியும் எப்போது வேண்டுமானாலும் உடைவதற்கான அறிகுறிகளை கொண்டிருக்கும். இருப்பினும், தற்போது ட்ரம்ப்பிடம் செல்வாக்கு பெற்றுள்ள மஸ்க் உள்ளிட்ட பெரிய தொழில்நுட்ப ஜாம்பவான்கள், அவரது அதிபர் பதவி தொடங்கியவுடன் அந்த செல்வாக்கைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வார்கள் என்பதில் ஐயம் இல்லை.
பல நிபுணர்கள் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளபடி, ட்ரம்ப் சித்தாந்த ரீதியாக இருப்பதை விட பரிவர்த்தனை ரீதியாக செயல்படுபவர். உறுதியாக நிறுவப்பட்ட தனது கொள்கைகளை விட கருத்துக் கணிப்புகளின் அடிப்படையியே அவர் தற்போது முடிவுகளை எடுக்க முனைகிறார். ட்ரம்ப் மற்றும் மஸ்க் இடையேயான இந்த ‘நட்புறவில்’ கொள்கை வேறுபாடுகளால் விரிசல் ஏற்படலாம்.
தேசியவாதிகளுக்கும் பெரிய தொழில்நுட்ப ஆளுமைகளுக்கும் இடையே சமரசத்தை டிரம்ப் ஏற்படுத்த முயலலாம். அமெரிக்க – மெக்சிகோ எல்லைச் சுவரை மீண்டும் புதுப்பிப்பது, குடியேற்ற அமலாக்கத்தை தீவிரமாக விரும்பும் தேசியவாதிகளை திருப்திப்படுத்தக்கூடும்.

