கோலாலம்பூர்:
புத்தாண்டு தினத்தன்று ஆபத்தான முறையில் சைக்கிள் ஓட்டியதற்காகவும், சாலை விதிகளை பின்பற்றத் தவறியதற்காகவும் 21 வாலிபர்களை தோப்புக்கரணம் போடவைத்து, வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர் கோலாலம்பூர் போக்குவரத்து காவல்துறையினர்.
14 முதல் 17 வயதுடைய 21 இளைஞர்கள் பிரேக், பெல்ஸ் அல்லது விளக்குகள் இல்லாமல் சைக்கிள் ஓட்டுவது, ஆபத்தான சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுவது போன்ற குற்றங்களைச் செய்திருப்பது கண்டறியப்பட்டது என்று, கோலாலம்பூர் நகர போக்குவரத்து அமலாக்க மற்றும் புலனாய்வுத் துறைத் தலைவர், துணைஆணையர் முகமட் சம்சுரி முகமட் இசா தெரிவித்தார்.
அவர்களுக்கு போக்குவரத்து விதிகள் (விதி 42) மற்றும் சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 112 ஆகியவற்றின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்றாலும், மீண்டும் குற்றங்களைச் செய்வதைத் தடுக்க ஏனைய பதின்வயதினர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும் வகையிலும், போக்குவரத்து விதி முறைகளை அவர்கள் கடைப்பிடிக்கவும் இந்த மாற்று அணுகுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி இரவு 11.30 மணியளவில், கோலாலம்பூரில் உள்ள ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷாவில் சாலைப் போக்குவரத்துத் துறை மற்றும் குடிநுழைவுத் துறையின் கூட்டு நடவடிக்கையின் போது இந்தச் சம்பவம் நடந்ததாக அவர் மேலும் கூறினார்.
இது தொடர்பான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது, இதற்கு பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.


