ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த திங்களன்று (டிச.23) ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 6 வது நாளாக இன்றும் (டிச.28) தொடர்கிறது.
கோட்புட்லி-பெஹ்ரோர் மாவட்டத்திலுள்ள விவசாய நிலத்தில் 3 வயது பெண் குழந்தையான சேத்துனா, கடந்த டிச.23 அன்று 700 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்தது. அந்த ஆழ்துளைக் கிணற்றின் 120 வது அடியில் சிக்கியுள்ள குழந்தையை மீட்க கடந்த திங்கள் கிழமை முதல் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அந்த ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகிலேயே 160 அடி ஆழத்திற்கு ஒரு மிகப்பெரிய குழித்தோண்டப்பட்டு அதனுள் பாதுகாப்பு உறைகள் இறக்கும் பணி இன்று (டிச.28) காலையுடன் நிறைவடைந்து, அந்த குழந்தைக்கு நேராக சுரங்கம் தோண்டும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்நிலையில், தற்போது தோண்டப்பட்ட அந்த குழியின் வழியாக மின்விசிறிகளும், ஆகிஸ்ஜன் டேங்கும், விளக்குகளும் அனுப்பப்பட்டுள்ளன.
ஆனால், மீட்புப் பணி மிகவும் தாமதாமாகவும் அலட்சியப்போக்குடனும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த குழந்தையின் உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து, அந்த குழந்தையின் தாயார் கண்ணீர் மல்க அளித்த பேட்டியில் திங்கள் கிழமை விழுந்த குழந்தை இத்தனை நாள்களாக உணவுத் தண்ணீர் எதுவுமின்றி அந்த ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ளதாகவும், மீட்புப் படையினர் தொடர்ந்து திட்டங்களை மாற்றிக்கொண்டே இருப்பதினால் குழந்தையை வெளியே கொண்டுவருவது தாமதமாவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதையும் படிக்க: 2024-ல் உருவான தலைவர்! இந்திரா காந்தியை ஈடுசெய்வாரா?

