ஆயிரம் நாள்களைக் கடந்தும் முடிவடையாமல் சென்றுகொண்டிருக்கிறது ரஷ்யா- உக்ரைன் போர். முன்பை விட மிகத் தீவிரமாக நடந்துகொண்டிருக்கும் இந்த போரில், ரஷ்யா முதன்முறையாக கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணையை உக்ரைன் மீது பிரயோகித்திருக்கிறது. இதை, உக்ரைனின் முன்னாள் ராணுவத் தளபதி `மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது” என வர்ணித்திருக்கிறார்.
உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்ய அதிபர் புதின் , கடந்த 2022, பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன்மீது போர்த்தொடுக்க தனது நாட்டு ராணுவத்துக்கு அதிரடியாக உத்தரவிட்டார். இதையடுத்து, வான்வழித் தாக்குதல்கள், தரைவழித் தாக்குதல்கள் நடத்தியபடி உக்ரைன் எல்லைக்குள் நுழைந்தது ரஷ்ய ராணுவம். அடுத்தடுத்து உக்ரைனின் பகுதிகளை ஆக்கிரமித்துக்கொண்டே வந்தே ரஷ்யப் படைகள், உக்ரைன் தலைநகர் கீவ்வை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தது. அந்தநிலையில்தான், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்குலக நாடுகளின் ஆயுத உதவிகளுடன் மாபெரும் ரஷ்யப் படைகளை எதிர்த்து மல்லுக்கட்டி வருகிறது உக்ரைன். இருப்பினும், ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களால் நிலைகுலைந்து வருகிறது.

