குறுகிய கால அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக 70,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக, வர்த்தக, வாணிபம் மற்றும் உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
இன்றையதினம் (20) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
நேற்றையதினம் (19) இடம்பெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில், அரிசித் தட்டுப்பாடு தொடர்பில் உடனடித் தீர்வு காணப்பட வேண்டுமெனும் முடிவுக்கு வந்ததாக அர் தெரிவித்தார்.
அதற்கமைய இது தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுடன் அடுத்த அமைச்சரவையில் இதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பிக்குமாறு விவசாயம், வர்த்தக அமைச்சர்களிடம் யோசனை முன்வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் 4.00 மணியளவில் விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த மற்றும் வர்த்தக அமைச்சர் எனும் வகையில் தானும் இந்த அமைச்சுகள் இரண்டினதும் அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட கலந்துரையாடலில், குறுகியகால தீர்வாக சதொச மற்றும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் (STC) ஊடாக 70,000 மெற்றிக் தொன் அரிசித் தொகையை இறக்குமதி செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதில் நாட்டு அரிசிக்கு அதிக முக்கியத்துவம் வழங்க முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
The post 70,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்ய முடிவு appeared first on Thinakaran.


