வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை குத்தி கொலை
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மல்லிபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் ரமணி என்பவர் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருக்கு வயது 26. இவர் ஆசிரியை பணியில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தார். இந்நிலையில், ஆசிரியர் ரமணி வழக்கம்போல் இன்று காலை அரசு பள்ளிக்கு வந்துள்ளார். பள்ளியில் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போது வகுப்பறைக்குள் வந்த சின்னமலை கிராமத்தை சேர்ந்த மதன்குமார் என்பவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, கழுத்தில் குத்தினார். இதனால் ரமணி ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் ஆசிரியை ரமணியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எனினும் மருத்துவமனைக்குச் செல்லும் முன்பே, ரமணி உயிரிழந்தார்.

