தலைநகர் டெல்லியில் காற்று மாசு மிகவும் தீவிரமான நிலைக்கு சென்றுள்ளதால், உச்சகட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. காற்று மாசால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? என்னென்ன கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?
தலைநகர் டெல்லியைப் பொருத்தவரை, ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில், அதாவது அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது.
காற்றின் தரம் என்பது 6 நிலைகளில் கணக்கிடப்படுகிறது. அதாவது, குறியீடு அளவு பூஜ்யம் முதல் 50 வரையான அளவுக்கு இருந்தால், காற்று தரமாக இருப்பதாக கருதப்படுகிறது. 50 முதல் 100 வரை இருந்தால், ஏற்றுக் கொள்ளும் வகையில் காற்று இருப்பதாகவும், 100 முதல் 200 வரை இருந்தால் மிதமான காற்று மாசாகவும், 200 முதல் 300 வரை இருந்தால் மோசமான நிலையில் இருப்பதாகவும், 300 முதல் 400 வரை இருந்தால் மிகவும் மோசம் என்றும், 400 முதல் 500 வரை இருந்தால் தீவிரமான காற்று மாசு என்றும் கணக்கிடப்படுகிறது.
இந்த சூழலில், டெல்லியின் பல்வேறு பகுதிகளில் மிகவும் தீவிரமான நிலையில், அதாவது, 1,300 முதல் 1,600 வரையான அளவில் காற்று மாசு பதிவானது. காற்று மாசு காரணமாக, மக்களுக்கு ஆஸ்துமா, மாரடைப்பு, மூச்சுவிடுவதில் பிரச்சினை ஆகிய பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. காற்று மாசு ஏற்படுவதற்கு நிலத்துக்கு மேல் பகுதியில் குளுமையான காற்றுத் தொகுப்பு உருவாவது, பஞ்சாப், ஹரியானா போன்ற அண்டை மாநிலங்களில் அறுவடைக்குப் பிறகு வேளாண் பயிர்களை எரிப்பதால் வரும் புகை உள்ளிட்டவையே காரணமாக அமைகிறது.
காற்று மாசு மோசமடைந்ததால், விமானம், ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மிகவும் உச்சபச்சமான 4-ஆம் நிலை மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ளன. இதன்படி, 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளைத் தவிர மற்ற வகுப்புகளில் நேரடியாக பாடம் நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டு, ஆன்லைனில் பாடம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்களை எடுத்துவரும் மற்றும் சேவைகளுக்கான வாகனங்களைத் தவிர, மற்ற சரக்கு வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லிக்கு வெளியே பதிவுசெய்யப்பட்ட மின்சார வாகனங்கள், சிஎன்ஜி, பிஎஸ்-4 டீசல் வாகனங்களைத் தவிர, மற்ற இலகுரக வர்த்தக வாகனங்கள், டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் பதிவுசெய்யப்பட்ட பிஎஸ்-4 மற்றும் அதற்கு குறைவான திறன்கொண்ட டீசலில் இயங்கும் நடுத்தர மற்றும் கனரக சரக்கு வாகனங்களுக்கும் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.
அரசு, நகராட்சி அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்களை வீட்டிலேயே பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களை மூடுவது, அவசரநிலையற்ற வர்த்தக நடவடிக்கைகளை நிறுத்துவது, கார்களை இயக்குவதற்கு ஒற்றை மற்றும் இரட்டை எண் அடிப்படையில் அனுமதி அளிப்பது போன்ற நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுக்கலாம்.
தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிப்பது குறித்து மத்திய அரசு முடிவுசெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள், வயதானவர்கள், மூச்சுப்பிரச்சினை, இதயப் பிரச்சினை மற்றும் நீடித்த நோய் இருப்பவர்கள் முடிந்தவரை வீடுகளிலேயே இருக்கவும், வெளியில் செல்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, காற்றை தூய்மைப்படுத்தும் கருவிகளின் விற்பனை 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)