இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.
2022ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் கிளர்ச்சியால் கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து இலங்கையின் அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். இவரது பதவி காலம் வரும் நவம்பர் 17ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான பொதுத் தேர்தல் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அனுரகுமார திஸநாயகே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.
இவர்களை தவிர, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே உள்பட 38 பேர் தேர்தலில் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் மொத்தம் 1.7 கோடி மக்கள் வாக்களிக்கவுள்ள நிலையில் நாடு முழுவதும் மொத்தம் 13,134 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று தேர்தல் முடிவடைந்த பிறகு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கப்படும். தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகி விடும் என்பதால் இலங்கையின் புதிய அதிபர் யார் என்பது நாளையே தெரிந்துவிடும்.
இந்த முறை ரணில் விக்ரமசிங்க – சஜித் பிரேமதாசா – அனுரகுமார திஸநாயகே என மும்முனைப் போட்டி நிலவுவதால் இலங்கையில் இதுவரை நடந்த தேர்தல்களிலேயே மிக இழுபறியான அதிபர் தேர்தலாக இது இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
