லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய பேஜர் கருவிகளின் பேட்டரிகளை வெடிக்க வைத்து நூதன தாக்குதல் நடத்தப்பட்டது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசா மீதான போரின் இடையே ஹிஸ்புல்லா அமைப்பு மீது மறைமுகப் போரை இஸ்ரேல் கட்டவிழ்த்துவிட்டுள்ளதா? என்ற சந்தேகம் பதட்டத்தை மேலும் அதிகரித்துள்ளது.
பேஜர்.. கடைசியாக 90ஸ் சினிமாக்களில் பார்த்த நியாபகம்தான் இருந்திருக்கும். ஆனால் லெபனான் நாட்டில் உள்ள ஆயுதமேந்திய போராளி அமைப்பான ஹிஸ்புல்லா குழுவினர், தங்களுக்குள்ளான தகவல் பரிமாற்றத்திற்காக பேஜர்களைத் தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் தான் அந்நாட்டில் மிகப்பெரிய சைபர் தாக்குதல் நிகழ்த்தப்பட்டு பேஜர்கள் வெடிக்க வைக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான பேஜர்கள் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியதால், தலைநகர் பெய்ரூத் உள்ளிட்ட பல பகுதிகளில் மரண ஓலம் ஒலித்ததால் மக்கள் பதற்றத்துக்கு உள்ளாகினர்.
இந்த மிகப்பெரிய சைபர் தாக்குதலுக்கு இஸ்ரேலைக் கைகாட்டியுள்ளது ஹிஸ்புல்லா அமைப்பு. இதற்கான காரணம், காசா மீதான இஸ்ரேல் போர் தொடுத்துள்ள நிலையில், காசாவுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதனால் இஸ்ரேலின் கண்காணிப்பில் இருந்து தப்புவதற்காக, மொபைல் போன்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஹிஸ்புல்லா அமைப்பு அதன் உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து தகவல் பரிமாற்றத்திற்காக ஹிஸ்புல்லா அமைப்பினர் பேஜர் கருவிகளுக்கு மாறினர்.
இந்த நிலையில் தான், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தும் பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடிக்கும் வகையில் சைபர் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4 மணியளவில் இந்தத் தாக்குதல் தொடங்கி ஒரு மணி நேரம் நீடித்ததாகவும், அடுத்தடுத்து ஆயிரக்கணக்கான பேஜர்கள் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதற பலர் பலத்த காயமடைந்தனர்.
Also Read |
ஆயிரம் பேஜர்கள் வெடிக்கவைத்து தாக்குதல்… லெபனானில் பயங்கரம்… 8 பேர் பரிதாப பலி!
கையில், உடையில், பையில் வைத்திருந்த பேஜர்கள் வெடித்ததில் பலரும் ரத்தக் காயமடைந்து கதறினர். மருத்துவமனைகளில் மரண ஓலம் ஒலித்தது.
இந்தத் தாக்குதலில் 10 வயது சிறுமி, ஹிஸ்புல்லா அமைப்பினர் என 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், சுமார் மூன்றாயிரம் பேர் காயமடைந்திருப்பதாகவும், அதில் பலர் மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஈரான் தூதர் முஜூதாபா அமானி காயமடைந்ததாகவும், ஹிஸ்புல்லா பிரதிநிதி அலி அம்மாரின் மகன் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சைபர் தாக்குதல் மூலம் பேஜர்களின் லித்தியம் பேட்டரிகள் அதிக வெப்பமடைய வைத்து வெடிக்க வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், பேஜர்கள் எவ்வாறு சரியாக வெடிக்கச் செய்யப்பட்டன என்பது இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.
இஸ்ரேலிய உளவுத்துறையினர் ஹிஸ்புல்லாவுக்கு ஏற்றுமதியான பேஜர்களை இடைமறித்து சிறிய வெடிப்பொருட்களைச் செலுத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனால் சமீபத்தில் பெறப்பட்ட புதிய பேஜர்களைத் தூக்கி எறியுமாறு ஹிஸ்புல்லா அதன் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஹிஸ்புல்லா அதிகாரிகள், விரிவான விசாரணை நடத்தி வரும் நிலையில், தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இஸ்ரேல் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்தச் சம்பவம் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே பதட்டத்தை மேலும் அதிகரித்துள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)