Last Updated:
இதுவரை சுமார் 1,300 உடல்களிலிருந்து டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டுத் தற்காலிகமாக அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, சுமார் 4 வாரங்கள் கடந்த நிலையிலும் மாயமான 6,000-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வெள்ளப்பெருக்கில் இதுவரை 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 26 அன்று நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் உருவான இந்தத் திடீர் வெள்ளம், நாட்டின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் உள்ள நகரங்களையும் கிராமங்களையும் சூறையாடியது. இமயமலை எல்லைப் பகுதியிலிருந்து தெற்கு நோக்கிப் பாயும் போதேகோஷி (Bhotekoshi) நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, வீடுகள், வாகனங்கள், சாலைகள் மற்றும் பாலங்களை அடித்துச் சென்றதுடன், நீர்மின் திட்டங்களுக்கும் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. இந்த இயற்கைச் சீற்றத்தில் சீனப் பகுதியிலும் 43 பேர் உயிரிழந்துள்ளனர்; அங்கு 500-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை.
ரசுவா (Rasuwa) மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள ஆற்றுப் பகுதிகள், இடிபாடுகள் மற்றும் சேதமடைந்த நீர்மின் நிலையங்களில் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ரசுவாவில் உள்ள ‘அப்பர் திரிசூலி-1’ நீர்மின் திட்டத்தின் சுரங்கப் பாதையிலிருந்து மட்டும் 17 உடல்களை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர்.
சேறுகளிலும் கம்பி வலைகளிலும் சிக்கியிருந்த இந்த உடல்களை கேஸ் கட்டர்கள் மற்றும் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி நேபாள ராணுவத்தினர் மீட்டெடுத்தனர். சுரங்கப் பாதைகளில் தேங்கியுள்ள இடிபாடுகளை முழுமையாக அகற்ற இன்னும் 3 முதல் 4 மாதங்கள் வரை ஆகலாம் என ராணுவக் தளபதி தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் நுவாகோட் (Nuwakot) மற்றும் தாடிங் (Dhading) மாவட்டங்களை இணைக்கும் பல தொங்கு பாலங்கள் சேதமடைந்துள்ளன. இதில் 12 தொங்கு பாலங்களைச் சீரமைக்கும் பணியும், முற்றிலும் சேதமடைந்த 33 பாலங்களை புதிதாகக் கட்டும் பணியும் தொடங்கப்பட்டுள்ளன. போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கும், மருத்துவ வசதிகளுக்கும் நீண்ட தூரம் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட உடல்களை அடையாளம் காண்பது அதிகாரிகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. வெள்ள நீரில் நீண்ட நேரம் ஊறி, சேறுகளில் அடித்துச் செல்லப்பட்டதால் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்குச் சிதைந்துள்ளன. இதுவரை மீட்கப்பட்ட உடல்களில் 110 உடல்கள் மட்டுமே குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதனால் மரபணு (DNA) பரிசோதனை மூலம் உடல்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 1,300 உடல்களிலிருந்து டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டுத் தற்காலிகமாக அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

