Last Updated:
இந்த வெற்றியின் மூலம் டி20 கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு எதிராக இங்கிலாந்து தனது தொடர்ச்சியான 15-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) டி20 தரவரிசையில் இந்தியாவை பின்னுக்குத்தள்ளி உலகளவில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
மாஞ்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதி மற்றும் மூன்றாவது டி20 போட்டியில், இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பலத்த காற்று வீசிய சூழ்நிலையில் களம் இறங்கிய இலங்கை அணிக்குத் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசாங்கா 24 பந்துகளில் 36 ரன்களும், கமிந்து மெண்டிஸ் 28 பந்துகளில் 35 ரன்களும் எடுத்தனர். இருப்பினும், இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் துல்லியமான தாக்குதலால் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இறுதியில் இலங்கை அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்களுக்குச் சுருண்டது. இங்கிலாந்து தரப்பில் வில் ஜாக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஆட்டநாயகன் விருது பெற்ற சோனி பேக்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கேப்டன் சரித் அசலங்கா தேவையில்லாமல் ரன் அவுட் ஆனதும், வனிந்து ஹசரங்கா ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்ததும் இலங்கை அணிக்கு பின்னடைவாக அமைந்தது.
125 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி, ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. தொடக்க ஆட்டக்காரர் அனைரின் டொனால்ட் 13 ரன்களில் ஆட்டமிழந்த போதிலும், ஜோஸ் பட்லர் மற்றும் கேப்டன் ஹாரி புரூக் இணை இலங்கை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. 9.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த இங்கிலாந்து அணி 126 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.
வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் டி20 கிரிக்கெட்டில் 15,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்த ஜோஸ் பட்லர், இப்போட்டியிலும் தனது அதிரடியைத் தொடர்ந்தார். அவர் 32 பந்துகளில் ஒரு சிக்ஸருடன் அரைசதம் கடந்து, இறுதிவரை ஆட்டமிழக்காமல் 62 ரன்கள் குவித்தார். ஹாரி புரூக் 33 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார்.
இத்தொடரில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் தொடர்நாயகன் விருதை வென்றார். இந்த வெற்றியின் மூலம் டி20 கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு எதிராக இங்கிலாந்து தனது தொடர்ச்சியான 15-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
தொடரை 3-0 என முழுமையாக வென்றதன் மூலம் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து உலக தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இலங்கை கேப்டன் அசலங்கா, இந்தத் தோல்வி தங்களுக்கு ஒரு பாடம் என்றும், தவறுகளைத் திருத்திக் கொண்டு மீண்டு வருவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றியின் அடிப்படையில் 41 போட்டிகளில் 269 பாயின்டுகளுடன் இங்கிலாந்து அணி டி20-யில் முதலிடம் வகிக்கிறது. அடுத்தடுத்த இடங்களில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் உள்ளன.


