
சவூதி அரேபியாவின் ரியாத் மன்னர் காலித் சர்வதேச விமான நிலையம் அருகே ஏற்பட்ட தீ விபத்து காரணமாக விமான சேவைகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் அமைந்துள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, அங்கு விமான சேவைகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
இன்று சனிக்கிழமை (19) விமான நிலையத்துக்கு அருகில் கரும்புகையும் தீப்பிழம்புகளும் எழுந்ததை நேரில் கண்ட சாட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானப் போக்குவரத்துக் கண்காணிப்பு தளமான Flightradar24, ரியாத் விமான நிலையத்தின் சேவைகளில் தீவிர தாமதங்களும் இரத்துகளும் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளதுடன், மிக மோசமான செயல்பாட்டுச் சிக்கலைக் குறிக்கும் அதிகபட்ச குறியீடான 5.0 ஐயும் அதற்கு வழங்கியுள்ளது.
விமான நிலையத்துக்கு அருகாமையிலுள்ள சவூதி அராம்கோ நிறுவனத்துக்குச் சொந்தமான எரிபொருள் தாங்கி ஒன்றில் தீ பற்றியதாக சம்பவ இடத்திலிருந்து கிடைத்த தகவல்களை மேற்கோள்காட்டி AFP செய்தி வெளியிட்டுள்ளது.
அண்டை நாடான ஏமனில் தீவிரமடைந்துள்ள மோதல்களுக்கு மத்தியில், ரியாத் மற்றும் அல்-கார்ஜ் பகுதிகளில் சவூதி அதிகாரிகளால் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்தே இத்தடை ஏற்பட்டுள்ளது. எனினும் பின்னர் ஆபத்துக் கட்டம் கடந்துவிட்டதாக சவூதி சிவில் பாதுகாப்புத் துறை அறிவித்தது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து உத்தியோகபூர்வமாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பதோடு, விமான நிலையம் நேரடியாகத் தாக்கப்பட்டதற்கான எவ்வித ஆதாரங்களும் வெளியாகவில்லை.
இச்சம்பவத்தால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் மற்றும் விமான சேவைகள் வழமைக்குத் திரும்புவது தொடர்பான கால எல்லை ஆகியவை இன்னும் தெளிவாகத் தெரியவரவில்லை.

