அமெரிக்க இராணுவத்தின் முற்றுகைக்கு மத்தியிலும், கடந்த சில மாதங்களில் ஹோர்முஸ் நீரிணை வழியாக 1 பில்லியன் பீப்பாய்களுக்கும் அதிகமான கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்பட்டதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM), சனிக்கிழமையன்று தெரிவித்தது.
“வளைகுடாப் பகுதியிலிருந்து 1 பில்லியன் பீப்பாய்களுக்கும் அதிகமான கச்சா எண்ணெய் வெளியேறுவதற்கு CENTCOM படைகள் ஆதரவளித்துள்ளன” என்று அட்மிரல் பிராட் கூப்பர் கூறினார்.
இத்தகவலை x சமூக ஊடகத் தளத்தில் அக் கட்டளைப் பிரிவு வெளியிட்டது.
நீரிணையை கடந்த 2,000-க்கும் மேற்பட்ட வணிகக் கப்பல்கள்
ஒருங்கிணைந்த பாதுகாப்பை வழங்குவதன் மூலம், இந்த முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப் பாதையில் 2,000-க்கும் மேற்பட்ட வணிகக் கப்பல்கள் கடந்து செல்வதற்கும் அமெரிக்கப் படைகள் உதவியுள்ளதாக கூப்பர் தெரிவித்தார்.

நீரிணையில் உள்ள முக்கிய போக்குவரத்துப் பாதைகளில் இருந்த கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுவிட்டதாகவும், ஆயிரக்கணக்கான கப்பல்கள் அந்த நீர்வழிப் பாதை வழியாகக் கடந்து சென்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஈரான் எண்ணெய் ஏற்றுமதி
அதே வேளையில், ஈரான் “பூஜ்ஜியம் பீப்பாய்” அளவிலேயே எண்ணெயை ஏற்றுமதி செய்துள்ளதாகக் குறிப்பிட்ட கூப்பர், இந்தத் தடைக்கு அமெரிக்காவின் “உறுதியான முற்றுகையே” காரணம் என்று தெரிவித்தார்.

கடந்த இரண்டு வாரங்களில் இந்த நீரிணை வழியாகக் கொண்டு செல்லப்பட்ட கச்சா எண்ணெய், சரக்கு மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் அளவு, முந்தைய ஆறு மாதங்களில் இருந்த எந்தவொரு காலகட்டத்தை விடவும் அதிகமாக இருந்ததாக கூப்பர் தெரிவித்தார்.
உலகின் மிக முக்கியமான எரிசக்திப் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான இந்த நீர்வழிப் பாதை வழியாகப் போக்குவரத்தை மேலும் அதிகரிக்க, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் கப்பல் நிறுவனங்களுடன் அமெரிக்கா இணைந்து பணியாற்றி வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

