ஏறிய வேகத்தில் இறங்கிய டாடா பங்குகள்.. சந்திரசேகரன் பதவி நீடிக்குமா.. குறுக்கே வரும் SP குரூப்..!
டாடா குழுமத்தில் தினமும் ஒரு அதிரடி என்பது போல், நேற்று சந்திரசேகரனுக்கு அளிக்கப்பட்ட 5 வருடப் பதவி நீட்டிப்பு காரணமாக டாடா குழும நிறுவனப் பங்குகள் அதிரடியாக உயர்ந்த நிலையில், இன்று அதிரடியாகச் சரிந்துள்ளது.
இதற்கு முக்கியமான காரணம் டாடா டிரஸ்ட் தலைவரும், டாடா டிரஸ்ட் அமைப்பும் சந்திரசேகரனின் நியமனத்தை முறையற்றது என அறிவித்துள்ளது. இன்று ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் டாடா குழும நிறுவனங்களின் பங்குகள் சுமார் 46,600 கோடி ரூபாய் அளவிலான சரிவை பதிவு செய்துள்ளது.

இதன் வாயிலாக இன்றைய வர்த்தகத்தில் டாடா கெமிக்கல்ஸ் பங்குகள் 8 சதவீதமும், டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப் 5 சதவீதமும், டிசிஎஸ் 3.5 சதவீதமும், டாடா மோட்டார்ஸ், டாடா எலெக்சி, டாடா டெக் போன்ற நிறுவனங்கள் 3 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் இதே நிறுவனம் தான் தடாலடியாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக குழு கூட்டம் நேற்று நடந்தது, இக்கூட்டம் பல்வேறு முக்கியமான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டிய கட்டாயத்தின் பெயரில் நடந்தது.
புதிய சேர்மன்-ஐ தேர்வு செய்வது, டாடா சன்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ விவகாரத்தைக் கையாள்வது, எஸ்பி குரூப் கட்டுப்பாட்டில் இருக்கும் டாடா சன்ஸ் பங்குகளை வாங்குவது எனப் பல விஷயங்களுக்கு மத்தியில் இக்கூட்டம் நடந்து.
டாடா சன்ஸ் நிர்வாக குழு நேற்று இப்பிரச்சனைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பதால் இதற்கு அனுபவம் வாய்ந்த அதிகாரி தேவை என்பதை உணர்ந்து மீண்டும் சந்திரசேகரனுக்குப் பதவி நீட்டிப்பு கொடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
இதற்கு டாடா சன்ஸ் நிர்வாக குழுவில் இருந்த 5 பேரில் 4 பேர் ஆதரவாக வாக்கு அளித்த நிலையில் நோயல் டாடா மட்டும் எதிராக வாக்கு அளித்தார். வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் சந்திரசேகரனுக்கு பிப்ரவரி 2027ல் முதல் அவரின் பதவி காலம் முடியும் வேளையில், அதை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்குப் பதவி நீட்டிப்பு அறிவிக்கப்பட்டது.
ஆனால் நோயல் டாடா அவர்கள் 66 சதவீத டாடா சன்ஸ் பங்குகளை வைத்திருக்கும் டாடா டிரஸ்ட் சார்பாக இவருடைய பதவி நீட்டிப்புக்கு எதிராக வாக்கு அளித்தது மட்டும் அல்லாமல் சந்திரசேகரன் ஏற்கனவே பதவி நீட்டிப்பு வேண்டாம் எனக் கூறி தனது கடிதத்தைக் கொடுத்துள்ளார், அதை டாடா சன்ஸ் நிர்வாகமும் ஏற்றுக்கொண்டு உள்ளது.
இதனைத் தொடர்ந்து புதிய தலைவரைத் தேடும் பணிகள் துவங்குவதற்குத் தயாராகியுள்ள வேளையில் மீண்டும் அவரை பதவியில் அமரவைப்பது சட்டவிரோதமானது எனக் குறிப்பிட்டு நோயல் டாடா தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும் நோயல் டாடா, ஷாப்பூர்ஜி பலோன்ஜி குரூப் கொடுத்த பங்கு விற்பனை தொடர்பான கோரிக்கையை டாடா சன்ஸ் நிர்வாகத்திற்கு அளித்துள்ளார்.
மிஸ்திரி குடும்ப நிறுவனத்திடம் இருக்கும் டாடா சன்ஸ் பங்குகளை விதி 11UA கீழ் குறைந்தபட்ச தொகையை அடிப்படையாகக் கொண்டு, குறைந்தபட்சம் 25000 கோடி ரூபாய் நிதியை அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேவேளையில் ஷாப்பூர்ஜி பலோன்ஜி குரூப் டாடா சன்ஸ் ஐபிஓ-வுக்கும் தயாராகியுள்ளது. ஐபிஓ மூலம் கூடுதல் பங்குகளைக் கூட விற்கலாம் என்பதால் இத்தகைய முடிவை எடுத்துள்ளது. இதனால் டாடா சன்ஸ் ஐபிஓ ஒரு பங்குதாரர் என்ற முறையில் ஆதரவு கொடுத்துள்ளது.

