கோலாலம்பூர்:
கிழக்குக்கரை ரயில் இணைப்புத் திட்டத்தின் (ECRL) பரிசோதனை இரயில் மூலம், கோம்பாக்கிலிருந்து குவாந்தான் போர்ட் சிட்டி வரையிலான பயண நேரம் இப்போது வெறும் 1 மணி நேரம் 30 நிமிடங்களாக (90 நிமிடங்கள்) குறைந்துள்ளது.
இன்று கோம்பாக் ஒருங்கிணைந்த முனைய நிலையத்திலிருந்து (ITT Gombak) குவாந்தான் போர்ட் சிட்டி நிலையம் வரை உள்ளூர் மற்றும் அனைத்துலக ஊடகவியலாளர்களைச் சுமந்து சென்ற ‘விரிவான பரிசோதனை ரயில்’ மூலம் இந்த வரலாற்றுப் பயண நேரம் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது.
மலேசியா ரெய்ல் லிங்க் (MRL) நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி டத்தோஸ்ரீ தார்விஸ் அப்துல் ரசாக் கூறுகையில், குவாந்தான் போர்ட் சிட்டியிலிருந்து கோம்பாக்கிற்கான மறுபயணமும் அதே 1 மணி நேரம் 30 நிமிடங்களிலேயே நிறைவடைந்ததாகத் தெரிவித்தார்.
இந்த அதிவேகப் பயணத்தின் போது, தென்கிழக்கு ஆசியாவிலேயே மிக நீண்ட இரயில் சுரங்கப்பாதையான 16.39 கிலோமீட்டர் நீளமுள்ள ‘கெந்திங் ECRL சுரங்கப்பாதையையும்’ இந்த இரயில் வெற்றிகரமாகக் கடந்தது.
“தற்போது நடைபெற்று வரும் சோதனை மற்றும் நடைமுறைப்படுத்தல் கட்டத்தின் முன்னேற்றம் எங்களுக்கு மிகுந்த திருப்தியளிக்கிறது. பொதுமக்களுக்குச் சேவையைத் தொடங்குவதற்கு முன், அனைத்து அமைப்புகளும் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்ய விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.” என்று, MRL தலைமைச் செயலதிகாரி டத்தோஸ்ரீ தார்விஸ் அப்துல் ரசாக் கூறினார்.
இதுவரை ECRL திட்டத்தின் ஒட்டுமொத்த சோதனைத் திட்டங்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை நிறைவடைந்துள்ளன. சிக்னலிங் அமைப்புகளின் சோதனைகள் அக்டோபர் மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் வரையிலான புள்ளிவிவரங்களின்படி, ECRL திட்டத்தின் ஒட்டுமொத்த கட்டுமானப் பணிகள் 95.41 சதவீதத்தை எட்டியுள்ளன. கோத்தா பாருவிலிருந்து கோம்பாக் வரையிலான முதலாவது கட்டத்தின் பணிகள் இந்த ஆண்டின் இறுதிக்குள் முழுமையாக நிறைவடையும் என திட்டமிடப்பட்டுள்ளது.
கிளந்தான், திரெங்கானு, பஹாங் மற்றும் சிலாங்கூர் ஆகிய மாநிலங்களை இணைக்கும் இந்த 665 கிலோமீட்டர் நீள ECRL இரயில் பாதை முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும்போது, கோத்தா பாருவிலிருந்து கோம்பாக்கிற்கான 7 மணி நேர சாலைப் பயண நேரம் வெறும் 4 மணி நேரமாகக் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.



