Last Updated:
சிறுமி அடிக்கடி வீட்டை விட்டுச் சென்று சில நாட்கள் கழித்துத் திரும்புவது வழக்கம் என்பதால், அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
டெல்லியில் 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தன்னை சந்திக்க வந்த சிறுமியை 17 வயது சிறுவனும் அவனது நண்பர்களும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர், ஸ்வரூப் நகரில் உள்ள பாழடைந்த திறந்தவெளி மைதானத்திற்கு அச்சிறுமியைக் கொண்டு சென்று கத்தியால் பலமுறை குத்திக் கொலை செய்ததாகவும் கொலையை மறைப்பதற்காக உடலின் மீது இலைகள் மற்றும் மண்ணைப் போட்டு மூடிவிட்டுத் தப்பியோடியதாகவும் சொல்லப்படுகிறது.
காவல்துறை விசாரணையின்படி, அந்த இளம் பெண் தனக்குத் தெரிந்த 17 வயது பையனைச் சந்திக்கச் சென்றிருந்தார். அந்தச் சிறுவன் முதலில் அப்பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், பின்னர் தனது நண்பர்களை அழைத்ததாகவும், அவர்களும் அப்பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் யாரும் இல்லாததாலும், குற்றவாளிகளின் அடையாளம் ஆரம்பத்தில் தெரியாததாலும், காவல்துறையினர் அப்பகுதி மற்றும் அதை ஒட்டிய சாலைகளின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யத் தொடங்கினர். புலனாய்வாளர்கள் 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, சம்பவம் நடந்த நேரத்தில் அப்பகுதியில் ஒரு டெம்போ சந்தேகத்திற்கிடமாக நடமாடியதை அவர்கள் கவனித்தனர். இரவு நேரம் என்பதால் டெம்போவின் பதிவு எண் தெளிவாகத் தெரியவில்லை. அதன் பிறகு, போலீசார் அந்த வாகனத்தின் வழித்தடத்தை உறுதி செய்வதற்காக, பல சிசிடிவி கேமராக்கள் மூலம் அதன் நடமாட்டத்தைக் கண்காணித்து கண்டுபிடித்துள்ளனர்.
சிறுமி அடிக்கடி வீட்டை விட்டுச் சென்று சில நாட்கள் கழித்துத் திரும்புவது வழக்கம் என்பதால், அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. கடந்த 13ஆம் தேதி காலை குஷாக் சாலையில் சிறுமியின் ஒரு கை துண்டிக்கப்பட்ட நிலையிலும், சடலத்தின் சில பகுதிகளைத் தெரு நாய்கள் கடித்துக் குதறிய நிலையிலும் போலீசார் மீட்டனர்.
இது குறித்த விசாரணையில், 19 வயதான சிவம் கணேஷ் என்பவரையும், 16 முதல் 17 வயதுடைய 3 சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட 2 கத்திகள், குற்றத்தின் போது குற்றவாளிகள் அணிந்திருந்த ஆடைகள், குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட டெம்போ வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்


