International
oi-Hema Vandhana
பிரெஸ்ஸிலியா: பிரேசிலில் போலீஸாரிடம் சிக்காமல் ஒருத்தர் இருந்தாராம்.. ஒருவழியாக அந்நபரை போலீசார் சுற்றி வளைத்துவிட்டனர்.. பிறகு அவரை கைது செய்ய அருகில் சென்றபோது, அவரது தோற்றத்தை பார்த்து போலீசார் அரண்டு போய்விட்டார்கள்.. அவரது கையில் 2 வயது குழந்தையும் இருந்தது.. தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி பிரேசிலையே பரபரப்பாக்கி உள்ளது. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!
பிரேசிலின் பாரைபா மாநிலத்தில் உள்ளது முலுங்கு என்ற பகுதி. இங்கு சமீபத்தில் ஒரு கொலை நடந்து விட்டது. எனவே, இது தொடர்பாக கடந்த சில நாட்களாகவே போலீஸார் ஒரு நபரை தீவிரமாக தேடி வந்தனர்…

பிரேசில் நபர் சுற்றிவளைப்பு
இந்த நபர் மீது, அப்பகுதியில் நடந்த பல கொலைகளில் தொடர்பு இருப்பதாகவும் போலீசாருக்கு சந்தேகம் இருந்தது. அதனால் அவரை பிடிக்க போலீஸார் மும்முரமானார்கள். அப்போது அந்த நபர் பயன்படுத்திய வாகனம் ஒன்று சிக்கியது. அந்த வாகனத்தில் இருந்த நபர் பிடிபட்டு விட்டார்.. முக்கிய கொலையாளியான ஜோர்லான் ஆல்வெஸ் டா சில்வா மட்டும் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
எனவே, அவரை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்று போலீசார் களமிறங்கினார்கள்.. 48 மணி நேரத்துக்கும் மேலாக போலீஸார் அவரை தேடினார்கள்.. இறுதியில், முலுங்கு மற்றும் அலாகோயின்ஹா பகுதிகளுக்கு இடையே உள்ள காட்டுப் பகுதிகளில் அந்த கொலைகாரர் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது..
கொலைகாரர் சிக்கினார்
ஆனால், அந்த கொலைகாரர் அங்கே பதுங்கியிருக்கிறார் என்று தெரிந்தும்கூட, அவரை பிடிப்பது அவ்வளவு எளிதாக நடக்கவில்லை… ஏனென்றால், கொலைகாரருக்கு மட்டும் அந்த காட்டுப்பகுதியில் உள்ள இடங்களெல்லாம் அத்துப்படி. அதனால் எங்கெங்கோ தப்பி ஓடி மறைந்து கொண்டேயிருந்தார்.. அவரை பிடிப்பதே போலீசுக்கு சவாலாக மாறியது.
இறுதியில் பிரேசிலின் பாரைபா மாநிலத்தில் 33 வயதான கொலைகாரர் ஜோர்லான் ஆல்வெஸ் டா சில்வாவை சுற்றி வளைத்துவிட்டனர்.. கைது செய்ய அருகில் சென்றபோது, அவரது தோற்றத்தை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர்..
விலகிய மேலாடை
யாருமே எதிர்பார்க்காத வகையில் கவுன் போட்டிருந்தார்.. கோடுகள் போட்ட நீண்ட கவுன், கருகருவென நீளமான தலைமுடி, லேடீஸ் செருப்பு, கருப்பு கண்ணாடி, கையில் நெயில் பாலிஷூடன் அவர் காணப்பட்டார்.. அப்படியானால் இத்தனை நாள் தேடி கொண்டிருந்த கொலையாளி ஒரு பெண்ணா? என்று போலீசார் கதிகலங்கி போனார்கள்.. அவரையே உற்று உற்று பார்த்தனர்..
அப்போதுதான், அந்நபரின் மேலாடை சற்று விலகி, உள்ளே அணிந்திருந்த ஆண்கள் ஷர்ட் தென்பட்டது. அப்போதுதான் லேடீஸ் கெட்டப்பில் நடமாடிய ஆண் என்று போலீசார் உறுதி செய்தனர்..
அவரிடம் இருந்த 2 வயது குழந்தை யார் என்று போலீசார் கேட்டார்கள்.. அதற்கு அவர், அது தன்னுடைய குழந்தை இல்லை என்றும், பெண் கெட்டப்புடன் கையில் குழந்தையும் இருந்தால் யாருக்கும் சந்தேகம் வராது என்பதால், குழந்தையை தூக்கி கொண்டு தப்பித்து வந்ததாகவும் சொன்னார்..
பிறகு குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டது.. அது எப்படி ஜோர்லானிடம் வந்தது என்பது குறித்தும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
யார் இந்த ஜோர்லான்
இந்த அளவுக்கு ஜோர்லானை போலீஸார் வலைவீசி பிடிக்க காரணம், கடந்த 3 மாதங்களில் மட்டும் 16 கொலைகளை செய்திருக்கிறாராம்.. ஜோர்லானுக்கு ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்குகளில் சிறை தண்டனை உள்ளது.. மொத்தம் சுமார் 5 முதல் 6 ஆண்டுகள் ஜெயிலில் இருந்திருக்கிறார்
கடந்த மே மாத இறுதியில்தான் ஜெயிலிலிருந்து வந்துள்ளார்.. வெளியில் வந்ததுமே இந்த தொடர் கொலைகள் நடந்ததாக கூறப்படுகிறது. இத்தனை கொலைகளை செய்வதற்கு குறைந்தது 4 பேராவது உடந்தையாக இருந்திருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.. எனவே, அந்த 16 கொலைகள் நடந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி
அப்போதுதான் அடுத்த அதிர்ச்சியை போலீசாருக்கு ஜோர்லான் தந்தார்.. இதுவரை 80 பேரை கொலைகளை செய்துள்ளாராம்.. 13 வயது இருக்கும்போதே முதல் கொலையை செய்து விட்டாராம்.. இதையெல்லாம் கேட்டு போலீசார் குழம்பி போயிருக்கிறார்கள்.
உண்மையிலேயே 80 பேரை கொன்றாரா? ஏன் கொன்றார்? என்பது குறித்து விசாரிக்கிறார்கள்.. மேலும் ஏற்கனவே முடிக்கப்படாமல் உள்ள பழைய கொலை கேஸ் ஃபைல்களையும் மீண்டும் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.
பெண் வேடத்தில் கொலையாளி தப்ப முயன்றது, கையில் இருந்த 2 வயது குழந்தை, கடந்த 3 மாதத்தில் 16 பேரை கொன்றது, 13 வயதில் முதல் கொலை செய்தது, வாழ்நாளில் 80 பேரை கொன்றது என ஜோர்லான் அளித்த வாக்குமூலத்தால் போலீசார் தலைசுற்றி போயிருக்கிறார்கள்.. இதில் எந்த தகவல்கள் உண்மை, இன்னும் எத்தனை கொலைகளுடன் அவருக்கு தொடர்பு இருக்கிறது என்பதற்கு போலீஸ் விசாரணையின் முடிவில்தான் பதில் கிடைக்கும்….!!!



