International
oi-Hema Vandhana
லண்டன்: முதலமைச்சர் விஜய் முதலீடுகளை ஈர்க்க போவதாக சொல்லி, எண்டர்டெயின்மெண்ட்டில் ஈடுபடுவது மக்களைக் கேவலமாக நினைக்கும் செயல். ரெட்டி குரூப் லண்டனுக்கு போயிருக்கிறார்களே? நமக்கு எப்படி முதலீடுகள் மொத்தமாக வரும்? வெறும் 10/% மட்டுமே வரும்.. “நாம் என்ன செய்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்” என்ற எண்ணத்தில் செயல்படும் முதலமைச்சரை பெற்றுவிட்டோமே என்று ஒவ்வொரு தமிழனும் வெட்கித் தலைகுனியும் காலம் விரைவில் வரும் என்று அரசியல் விமர்சகர் டாக்டர் பொன்ராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
Marshal Media சேனலுக்கு பேட்டி தந்துள்ள பொன்ராஜ், “முதலமைச்சர் லண்டன் பயணத்தில் தனியார் வென்ச்சர் கேப்பிட்டல்ஸ், தொழிலதிபர்களுடனான சந்திப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ பயணத்திட்டம் எதுவும் மக்களுக்கோ மீடியாக்களுக்கோ தெரிவிக்கப்படவில்லை.

முதலீடுகள் முதலமைச்சர் பயணம்
முதலீடுகளை ஈர்க்கப்போவதாகக் கூறி அரசு பணத்தில் தனது நண்பர்களுடன் கார் ரேஸ் உள்ளிட்ட பொழுதுபோக்குகளுக்காகவும் சுற்றுலாவுக்காகவும் சென்று மக்களை ஏமாற்றுகிறார். இது முதலீட்டுப் பயணம் என்றால் தொழில் துறை அமைச்சரோ, செயலாளரோ ஏன் உடன் செல்லவில்லை?
மேட்டூர் அணையை அவசரமாகத் திறந்து தண்ணீரை வீணடித்தது, தலைமைச் செயலகத்தில் டெண்டர் விடாமல் பல கோடியில் புதிய அறை கட்டுவது என தேவையில்லாத செலவுகள் தொடர்கின்றன. மக்களுக்கான தேவைகளை அறியாமல் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு, விமர்சனங்களை தவிர்க்க சோஷியல் மீடியாவில் டீமை வைத்துப் பொய்களை பரப்புகிறார்கள்.
ராஜதந்திர பாஸ்போர்ட்
முதலமைச்சர் லண்டனில் கார் ரேஸைப் பார்க்கும் போட்டோக்களும், வீடியோக்களும் அவர்களாகவே வெளியிட்டவைதான். மக்கள் வரிப்பணத்தில் லண்டன் சென்றிருக்கும் முதலமைச்சர் அங்கு என்ன செய்கிறார் என்பதை அறிய மக்களுக்கு முழு உரிமை உண்டு. இது தனிப்பட்ட பயணம் என்றால் தனி பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். அதை விடுத்து அரசு பயணமாக ராஜதந்திர பாஸ்போர்ட்டில் சென்றுவிட்டு எதற்காக இவ்வளவு ரகசியம் காக்க வேண்டும்?
தமிழ்நாட்டிற்கோ அல்லது இந்திய அரசுக்கோ எதிரான பணிகளில் ஈடுபடுகிறாரா அல்லது வெளியில் சொல்ல முடியாத வேலைகளில் ஈடுபடுகிறாரா என்ற கேள்வி எழுகிறது.. இன்ஸ்டாகிராம் மூலம் மக்களை ஏமாற்றி வாக்கைப் பெற்றுவிட்டால் தங்களைக் கேட்க முடியாது என்ற அகந்தை நிலவுகிறது.
முதலமைச்சர் லண்டனில் முதலீடு மீட்டிங்
உண்மையிலேயே முதலீடுகளை ஈர்க்கச் சென்றிருந்தால் தொழில் துறை அமைச்சரை அழைத்துச் சென்றிருப்பார்கள். இந்த பயணத்தால் பெரிய முதலீடுகள் வராது. ஹோட்டலில் சிலரைச் சந்தித்துப் படம் எடுப்பதோடு சரி.
லண்டன் பயணத்தின் மூலம் பெரிய அளவில் தொழில் முதலீடுகள் எதுவும் தமிழ்நாட்டிற்கு வராது.. ஹோட்டலில் தங்கியிருக்கும் போது வந்து சந்திப்பவர்களிடம் லட்சங்களில் முதலீடு, ஆயிரக்கணக்கான கோடிகளில் முதலீடு செய்வதாக வாய்வார்த்தையாக பேசுவதோடு இது முடிந்துவிடும்.. அந்த முதலீடு இங்கே வந்துவிடுமா?
முதலமைச்சருடன் “ரெட்டி குரூப்”
முதலமைச்சருடன் “ரெட்டி குரூப்” போன்ற தொழிலதிபர்கள் போயிருக்கிறார்கள்.. அவர்கள் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்குத் தான் தொழில் முதலீடுகளைக் கொண்டு செல்ல ஏற்பாடுகளைச் செய்வார்கள்.. ஆந்திரா மற்றும் கர்நாடகாவுக்குச் செல்லும் முதலீடுகளில் வெறும் 10% மட்டுமே தமிழ்நாட்டிற்கு வர வாய்ப்புள்ளது..
நான் 15-க்கும் மேற்பட்ட முதலமைச்சர்களுடன் பணியாற்றியிருக்கிறேன். பிற முதலமைச்சர்கள் 6 மாதங்களுக்கு முன்பே தனிக்குழு அமைத்துத் தயாரிப்புகளை செய்வார்கள். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடன் 20 நாடுகளுக்குப் பயணித்தபோது, வெளியுறவு அமைச்சகம் மூலம் 3 மாதங்களுக்கு முன்பே திட்டமிடல் தயார் செய்யப்படும்.
விஜய்யின் எண்டர்டெயின்மெண்ட் பயணம்
கனடா பயணத்தில் நதிகள் இணைப்பு திட்டத்திற்காக 500 மில்லியன் டாலர் முதலீட்டு உறுதிமொழி பெறப்பட்டு, அன்றைய பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர்கள் கருணாநிதி, நிதிஷ் குமாருக்கு தெரிவிக்கப்பட்டது. ஐஸ்லாந்தில் ஆழ்கடல் மீன்பிடித்தல் முறை பற்றி அறிந்து, 2005-ல் ஆளுநர்கள் மாநாட்டில் விளக்கக் காட்சி அளித்தேன். கலாமின் வழிகாட்டலில் தூதரக அதிகாரிகள் மூலம் தொழில்களைக் கொண்டுவர இரவெல்லாம் தூங்காமல் உழைத்தோம்.
இப்படி தீவிரமாக உழைக்க வேண்டிய இடத்தில், முதலீடுகளை ஈர்க்கப்போவதாக சொல்லி, எண்டர்டெயின்மெண்ட்டில் ஈடுபடுவது மக்களைக் கேவலமாக நினைக்கும் செயல். “நாம் என்ன செய்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்” என்ற எண்ணத்தில் செயல்படும் முதலமைச்சரைப் பெற்றுவிட்டோமே என்று ஒவ்வொரு தமிழனும் வெட்கித் தலைகுனியும் காலம் விரைவில் வரும்” என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.




