Tamilnadu
oi-Rajkumar R
ராணிப்பேட்டை: அதிகாரத்திற்கு வந்து விட்டோம், அடுத்து ஆட்சியை கைப்பற்றுவோம், ஆட்சியில் தலைவரை (திருமாவளவன்) முதல்வராக அமர வைக்கும் வரை போராடுவோம் எனவும், திமுகவினர் தற்போது தோல்வியால் வன்மத்தை கக்குகின்றனர், அக்கட்சியின் தொண்டர்கள் தலைமையின் கட்டுப்பாட்டில் இல்லை என அமைச்சர் வன்னியரசு கூறியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோண பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு கலந்து கொள்ள வந்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசுக்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து எஸ்ஆர் கேட் அம்மனூர் பகுதியில் அவர் தொண்டர்களிடையே உரையாற்றினர்.

அப்போது பேசிய அவர்,” தற்போது ஆட்சியை வெல்வோம் என்று தலைவர் சொன்னார். தற்பொழுது ஆட்சிக்கு வந்து விட்டோம். அடுத்து என்று கூறி முடிப்பதற்கு தொண்டர் ஒருவர் ஆட்சியை கைப்பற்றுவோம் என்று குரல் ஒலிக்க அதை வன்னியரசு வழிமொழிந்தார்.
மேலும் தலைவர் அவர்களை எப்படியாவது தமிழகத்தின் முதல்வராக அமர வைக்கும் வரை போராடுவோம். சிதம்பரத்தில் விநாயகர் சதுர்த்தி ஆன்மீக வழித்தடங்களிலும் ஏற்பட்ட நிகழ்வையும் மாணவர்கள் காலணிகளை தலையில் வைத்து செல்ல வேண்டும் என்ற ஜாதி கொடுமை குறித்து சம்பந்தப்பட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்கக் கூறியுள்ளேன். நேரில் சென்று ஆய்வு நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
திமுக முன்னாள் அமைச்சர்கள் நிர்வாகிகள் தற்பொழுது மேடைகளிலும் பேசும் வார்த்தைகளைக் கேட்க முடியவில்லை. திமுகவினர் தோற்றதால் வன்மத்தை கக்குகின்றனர். தலைமைத்துவம் தற்பொழுது இல்லாதது போல் தெரிகிறது. அதே நேரத்தில் கனிமொழியின் பதிவு வரவேற்கத்தக்கது.
விஜய் அஜித் சந்திப்பு இடைத்தேர்தலிலும் வருங்கால அரசியலில் பிரதிபலிக்குமா என கேட்கிறீர்கள். அஜித் விளையாட்டுத்துறையில் இருப்பதால் இதை அரசியலாக பார்க்க கூடாது. இந்திய அளவில் தமிழகத்தை விளையாட்டுகளில் முதலிடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்குடன் விஜய் சென்று, நட்பின் ரீதியாக அஜித்தை உற்சாகப்படுத்தியுள்ளார்.
இதன் மூலம் இந்தியாவிலேயே தமிழக விளையாட்டுப் போட்டிகளில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தமிழக முதல்வர் விஜய் கலந்து கொண்டார். இதை அரசியலாக கூடாது. மேலும் விஜய் அவர்களின் கட்சியே பூஸ்ட் ஆக இருக்கும் பொழுது அஜித் அதற்கு தேவைப்படவில்லை” என்றார்.

