
செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யப்படவுள்ளதுடன் பயனாளிகள் நாளையிலிருந்து பணத்தைப் பெறலாம் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
செப்டம்பர் மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று (16) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்மூலம் தகைமை பெற்ற பயனாளிகள் தமக்குரிய கொடுப்பனவுகளை நாளைய தினம் முதல் வங்கிகளில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 999,053 பயனாளி குடும்பங்களுக்காக 9 பில்லியனுக்கும் அதிகமான தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, 9,181,696,250 ரூபாயை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வைப்பு செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ள 213,335 பயனாளி குடும்பங்களுக்கு 2 பில்லியனுக்கும் அதிகமான நிதி வழங்கப்படவுள்ளது. இதற்காக 2,120,856,250 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த கொடுப்பனவுகளும் வங்கி முறைமையின் ஊடாக வழங்கப்படவுள்ளன.
வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யப்படும் இந்தக் கொடுப்பனவுகளை பயனாளிகள் எவ்வித சிரமமுமின்றி நாளை (17) முதல் தத்தமது வங்கிக் கணக்குகளில் இருந்து வழமை போன்று பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

