Cricket
oi-Yogeshwaran Moorthi
டெல்லி: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கப்பட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவருக்கு பதிலாக இளம் நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷியை பிளேயிங் லெவனில் சேர்க்க ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியா – ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய அபிஷேக் சர்மா 32 பந்துகளில் 82 ரன்களை விளாசி தள்ளினார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதேபோல் இளம் நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷி பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் வைபவ் சூர்யவன்ஷி சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார். ஆனாலும் ஆஃப்கானிஸ்தான் தொடரில் தொடக்க பிளேயிங் லெவனில் வைபவ் சூர்யவன்ஷி களமிறக்கப்படவில்லை.
இதனால் ரசிகர்கள் பலரும் வைபவ் சூர்யவன்ஷிக்காக குரல் கொடுத்தனர். இந்த தொடருக்கு முன் வைபவ் சூர்யவன்ஷி – சஞ்சு சாம்சன் கூட்டணி தொடக்கம் கொடுக்க போவதாக பேச்சுகள் வெளி வந்தன. ஆனால் கம்பீர் வழக்கம் போல் அபிஷேக் சர்மாவுக்கு மீண்டும் வாய்ப்பை கொடுத்தார். அதற்கேற்ப ஜிம்பாப்வே தொடரில் சொதப்பிய அபிஷேக் சர்மா, சொந்த மண்ணில் வெளுத்து கட்டினார்.
இந்த நிலையில் 2வது டி20 போட்டியில் வைபவ் சூர்யவன்ஷியை பிளேயிங் லெவனில் கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தொடர்ந்து இன்கன்சிஸ்டன்சியுடன் ஆடி வருவதாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின் அபிஷேக் சர்மா ஆடிய 11 போட்டிகளில் 2 அரைசதம் மட்டுமே அடித்துள்ளார்.
சஞ்சு சாம்சன் 5 போட்டிகளில் விளையாடி 42 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். இதனால் வைபவ் சூர்யவன்ஷியை நிரந்தர வீரராக மாற்றிவிட்டு சஞ்சு சாம்சன் அல்லது அபிஷேக் சர்மா ஆகியோரில் ஒருவரை பெஞ்சில் அமர வைக்க முடிவு விரைவில் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தால், அதனை பயபடுத்தி கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

