• Login
Thursday, September 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சிறுவர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்குச் சாட்சி சத்துருக்கொண்டான் படுகொலை…

GenevaTimes by GenevaTimes
September 10, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சிறுவர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்குச் சாட்சி சத்துருக்கொண்டான் படுகொலை…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈழத் தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் கிழக்கு மண் சிந்திய குருதி அளவற்றது. குறிப்பாக 1990ஆம் ஆண்டு கிழக்கு மாகாணம் பெரும் இனப்படுகொலைகளையும் காணாமல் ஆக்கல்களையும் எதிர்கொண்டது.

அந்த ஆண்டிலும் அதற்கு முன்னரும் பின்னரும் இடம்பெற்ற படுகொலைகள் ஈழத் தமிழ் மக்களின் அரசியல் உரிமை, பாதுகாப்பு மற்றும் நீதிக்கான கோரிக்கைகளை மேலும் வலுப்படுத்தின.

அந்த வரலாற்றில் 1990ஆம் ஆண்டு புரட்டாதி 9ஆம் திகதி இடம்பெற்ற சத்துருக்கொண்டான் படுகொலை முக்கியமானதாகும்.

சத்துருக்கொண்டான் எனும் வடு


வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு நான்கு நாட்களே கடந்திருந்த நிலையில், மட்டக்களப்பை அடுத்த சத்துருக்கொண்டான் பகுதியில் தமிழ் மக்கள் இலங்கை அரச படைகளால் படுகொலை செய்யப்பட்டனர்.

இன்று அந்தப் படுகொலையின் 36ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு நகரிலிருந்து சுமார் நான்கு கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள சத்துருக்கொண்டான் பிரதேசம் ஊறணி, பிள்ளையாரடி, பனிச்சையடி உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கியது.

1990ஆம் ஆண்டு புரட்டாதி 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை அந்தப் பகுதிகளை இராணுவத்தினர் சுற்றிவளைத்தனர்.

மாலை சுமார் 5.30 மணியளவில் வின்சன் டிப்போ தோட்ட இராணுவ முகாமில் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், அனைவரும் கட்டாயம் அதில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் இராணுவச் சீருடையில் வந்த ஒருவர் மக்களுக்கு அறிவித்ததாக சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.


இராணுவத்தின் அழைப்பை நிராகரித்தால் பிரச்சினை ஏற்படலாம் என்ற அச்சத்தில் மக்கள் முகாமுக்குச் சென்றனர். அங்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களில் முதியவர்கள் உட்பட பலர் லொறிகளில் ஏற்றப்பட்டனர்.

பின்னர் ஆண்கள், பெண்கள் எனப் பிரிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக நினைத்த மக்கள், தாங்கள் மீண்டும் வீடுகளுக்குத் திரும்ப முடியாத நிலைக்குள் கொண்டு செல்லப்பட்டிருந்ததை அறிய முடியவில்லை.

சிறுவர்களையும் விட்டுவைக்காத கொடூரம்

அன்றிரவு சுமார் 7 மணியளவில் அங்கு அழைத்துச் செல்லப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.

வாள்கள் மற்றும் கத்திகளால் வெட்டியும் குத்தியும் துப்பாக்கிகளால் சுட்டும் மக்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களின் உடல்கள் தீயிட்டு எரிக்கப்பட்டதாகவும் சாட்சியங்கள் கூறுகின்றன.

குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என எவ்வித வேறுபாடுமின்றி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

குறிப்பாக சிறுவர்களின் கைகளைப் பின்னால் கட்டி அவர்களை கத்தியால் குத்திக் கொன்றதாக உயிர்தப்பிய சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.

படுகொலையில் 184 பேர் கொல்லப்பட்டதாக பின்னர் இடம்பெற்ற விசாரணைகளில் பதிவு செய்யப்பட்டது.

அவர்களில் ஐந்து கைக்குழந்தைகள், பத்து வயதுக்குட்பட்ட 42 சிறுவர்கள், 85 பெண்கள் மற்றும் 28 முதியவர்கள் அடங்கியிருந்தனர். ஒரே இரவில் ஒரு கிராமத்தின் குடும்பங்கள் அழிக்கப்பட்டன. மறுநாள் வரை வின்சன் டிப்போ தோட்டப் பகுதியில் எரிந்த நெருப்பையும் புகையையும் அங்கிருந்தவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சாட்சியாக உயிர் தப்பிய கிருஷ்ணகுமார்

படுகொலையை முழுமையாக மறைத்துவிட முடியாமல் செய்த முக்கியமான சாட்சியாக கந்தசாமி கிருஷ்ணகுமார் உயிர்தப்பினார். மக்களுடன் அழைத்துச் செல்லப்பட்ட அவர் தாக்குதலில் வெட்டுக்காயங்களுக்கு உள்ளானார்.

இறந்துவிட்டதாகக் கருதி மற்ற உடல்களுடன் வீசப்பட்ட நிலையில், உயிருடன் இருந்த அவர் அங்கிருந்து தப்பி வேலிக்கரையை நோக்கி ஊர்ந்து சென்று புதருக்குள் மறைந்துகொண்டார்.

மறுநாள் மதகுரு ஒருவரின் உதவியுடன் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.


அவரை வைத்தியசாலையிலிருந்து இராணுவப் புலனாய்வாளர்கள் அழைத்துச் செல்ல முயன்றதாகவும், குறித்த மதகுரு அவரைப் பாதுகாத்து இரகசியமாக சிகிச்சை அளித்து காப்பாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் கிருஷ்ணகுமார் சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பான விசாரணைகளில் முக்கியமான சாட்சியங்களை வழங்கினார்.

அவர் உயிர்தப்பியிருக்காவிட்டால் அந்த இரவில் என்ன நடந்தது என்பதை நிரூபிக்கும் முக்கியமான நேரடி சாட்சியம் ஒன்று இழக்கப்பட்டிருக்கும்.

விசாரணைகளால் வெளிப்பட்ட உண்மை

படுகொலை இடம்பெற்ற பின்னர் வின்சன் டிப்போ தோட்ட இராணுவ முகாமை மக்கள் அணுகுவதற்கே அஞ்சினர். சில நாட்களுக்குப் பின்னர் தங்களுடன் அழைத்துச் செல்லப்பட்ட உறவினர்கள் எங்கே என இராணுவத்தினரிடம் மக்கள் கேள்வி எழுப்பினர்.

காணாமல் போனவர்களின் உறவினர்களால் முறைப்பாடுகள் செய்யப்பட்டன. மனித உரிமை அமைப்புகள் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட தரப்புகள் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டன.


இராணுவத்தினர் தமக்கு இதில் தொடர்பில்லை என மறுத்தபோதிலும், பின்னர் கிடைத்த சாட்சியங்கள் மற்றும் விசாரணைகள் சம்பவத்தின் உண்மையை வெளிக்கொண்டு வந்தன.

அன்றைய அரசாங்கம் சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையையும் முன்னெடுத்தது.

ஓய்வுபெற்ற நீதிபதி கே. பாலகிஷ்ணர் தலைமையிலான விசாரணையில் படுகொலை இடம்பெற்றதற்கான வலுவான சாட்சியங்கள் இருப்பதாகவும், அதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது. 

பன்னாட்டு ஆய்வுகளிலும் பதிவான படுகொலை 

சத்துருக்கொண்டான் படுகொலை இலங்கைக்குள் மட்டுமல்லாது பன்னாட்டு மனித உரிமை ஆய்வுகளிலும் பதிவானது.

அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுடன் தொடர்புடைய ஆய்வுகளில் கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் காணாமல் ஆக்கல்கள் ஆவணப்படுத்தப்பட்டன.

அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சட்ட ஆய்வாளர்களும் இலங்கையில் இடம்பெற்ற திட்டமிட்ட பொதுமக்கள் அழிப்பு சம்பவங்கள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டனர்.


சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பாக பொறுப்புக்கூறல் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல்வேறு மனித உரிமைத் தரப்புகளாலும் முன்வைக்கப்பட்டன.

விசாரணைகளில் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் குறிப்பிடப்பட்ட சில இராணுவ அதிகாரிகளுக்கு எதிராகவும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அரச படைகளின் பொறுப்பு மற்றும் கட்டளைப் பொறுப்பு தொடர்பான கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன.

நீதி மறுக்கப்பட்டு 36 ஆண்டுகள்

சத்துருக்கொண்டான் படுகொலை இடம்பெற்று 36 ஆண்டுகள் கடந்துவிட்டன. விசாரணைகள் இடம்பெற்றன; சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன; படுகொலைக்கான வலுவான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டது.

இருந்தபோதிலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை முழுமையான நீதி கிடைக்கவில்லை. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என ஆயுதமற்ற பொதுமக்கள் கொல்லப்பட்ட ஒரு சம்பவத்தில் கூட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த முடியாத நிலை, இலங்கையில் போர்க்காலக் குற்றங்கள் தொடர்பான பொறுப்புக்கூறலின் தோல்வியை வெளிப்படுத்துகிறது.


சத்துருக்கொண்டான் படுகொலை முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு படுகொலைகளுடன் இணைந்து பார்க்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான வரலாற்றுச் சம்பவமாகும்.

குறிப்பாக குழந்தைகள் உட்பட பொதுமக்கள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்களுக்கு நீதி கிடைக்காமல் இருப்பது, காணாமல் ஆக்கப்பட்டவர்களினதும் படுகொலை செய்யப்பட்டவர்களினதும் குடும்பங்களின் நீதிக்கான போராட்டத்தை மேலும் நீடிக்கச் செய்கிறது.


36 ஆண்டுகள் கடந்தாலும் சத்துருக்கொண்டான் மறக்கப்படவில்லை. அங்கு கொல்லப்பட்ட ஒவ்வொரு குழந்தையும், ஒவ்வொரு பெண்ணும், ஒவ்வொரு முதியவரும் ஒரு எண்ணிக்கை அல்ல; அவர்கள் ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள், ஒரு சமூகத்தின் அங்கங்கள்.

அவர்களின் மரணம் குறித்த உண்மையும் அதற்கான பொறுப்பும் முழுமையாக வெளிப்படுத்தப்படும் வரை சத்துருக்கொண்டான் படுகொலை முடிந்துபோன வரலாறாக மாறாது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை உள்ளிட்ட போர்க்காலக் குற்றங்களுக்கு நீதி கோரும் போராட்டத்தில் சத்துருக்கொண்டான் படுகொலையும் தொடர்ந்து நினைவுகூரப்பட்டு, உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான கோரிக்கையாக முன்வைக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

பொறுப்பு துறப்பு!


இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு,
10 September, 2026 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில்
வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும்
இல்லை.

Read More

Previous Post

PISA முடிவுகள் அமைச்சரின் செயல்திறன் மதிப்பீட்டு அட்டையல்ல; அவசரப்பட்டு உடனடி மாற்றங்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும் – மஸ்லீ – Malaysiakini

Next Post

பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ஆடைகளை களைவது பலாத்காரம் இல்லை! உயர்நீதிமன்றம் தீர்ப்பு | Jharkhand High Court Revises assault Attempt Conviction After 26 Years, Says Evidence Insufficient

Next Post
பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ஆடைகளை களைவது பலாத்காரம் இல்லை! உயர்நீதிமன்றம் தீர்ப்பு | Jharkhand High Court Revises assault Attempt Conviction After 26 Years, Says Evidence Insufficient

பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ஆடைகளை களைவது பலாத்காரம் இல்லை! உயர்நீதிமன்றம் தீர்ப்பு | Jharkhand High Court Revises assault Attempt Conviction After 26 Years, Says Evidence Insufficient

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin