Business
oi-Velmurugan P
பெரும் கடன் பிரச்சினையில் சிக்கியுள்ள ஜீ குழுமத்தின் நிறுவனர் சுபாஷ் சந்திராவுக்கு புதிய சிக்கல் வந்துள்ளது. ரூ.1,322 கோடி கடன் நிலுவை விவகாரத்தில், எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தை ஏமாற்றியதாக சுபாஷ் சந்திரா மீது சிபிஐ அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளது. முன்னதாக ஜீ குழுமம் சார்பில் வாங்கப்பட்ட ரூ.22,000 கோடி கடன் நிலுவையில் இருக்கும் நிலையில், தான் திவால் அடைந்துவிட்டதாக அறிவித்து, கடன் உத்தரவாதங்களுக்கு ரூ.6.25 கோடி செலுத்த அவர் முன் வந்தார். இதனை முதலில்தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் ஏற்றுக் கொண்டது. இதற்கு வங்கிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தை அடுத்து, தீர்ப்பாயம் தனது உத்தரவை நிறுத்தி வைத்திருந்தது.

ஜீ குழும நிறுவனங்களுக்கு, எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.1,322 கோடி கடன் பெறுவதற்காக போலி சொத்து மதிப்பு சான்றிதழ்களை வழங்கியதாகக் கூறப்படும் வழக்கில், சுபாஷ் சந்திரா மற்றும் சில தனி நபர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்திருக்கிறது.. அவரை தவிர, ஜீ குழுமத்தின் வசந்த் சாகர் பிராப்பர்டீஸ், அதன் இயக்குநர் பங்கஜ் சுரோலியா உள்ளிட்டோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க, நாட்டின் அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கும் அவசர ‘லுக்-அவுட் நோட்டீஸ்’ அனுப்பப்பட்டு, வழிகள் அடைக்கப்பட்டிருக்கிறது.
2018-ல் இரண்டு தனியார் நிறுவனங்கள் வாங்கிய கடன் தொகைக்கு சுபாஷ் சந்திராதான் சொந்த ஜாமீன் கையெழுத்திட்டார். அப்போது அவர் சமர்ப்பித்த நெட்வொர்த் (சொத்து மதிப்பு) சான்றிதழ்கள் தான் இப்போது வில்லங்கமாக நிற்கிறார். ரூ.500 கோடி கடன் வாங்கியபோது, “என் சொத்து மதிப்பு ரூ.59,113 கோடி!” என்று கூறியிருக்கிறார். அதேபோல் ரூ.480 கோடி கடன் வாங்கியபோது: “என் சொத்து மதிப்பு ரூ.40,562 கோடி!” என்றும் கூறியிருக்கிறார்.
இப்படி கடன் வாங்கியதால், அவரால் கடனை அடைக்க முடியவில்லை.. இதனால் கடன் நிலுவையாகி உள்ளது. இவரது திவாலாக்கும் நடவடிக்கை தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்திற்கு வந்தபோது, சுபாஷ் சந்திரா அளித்த வாக்குமூலம் அதிகாரிகளை அதிர வைத்திருக்கிறது. “ஏனெனில் 2017-18 காலகட்டத்தில் எனக்கு 58 ஆயிரம் கோடி அளவுக்கு எல்லாம் சொத்தெல்லாம் கிடையவே கிடையாது. 2024-ல் என் மொத்த சொத்து மதிப்பே வெறும் ரூ.31.79 கோடி தான்!” என்று சர்வசாதாரணமாக கூறியிருக்கிறார்.
போலி ஆவணங்கள் மூலம் சொத்து மதிப்பை உயர்த்திக் காட்டி கடனைப் பெற்றுவிட்டு, இப்போது சர்வசாதாரணமாக கையை விரிப்பதை பார்த்து எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனம் ( LICHFL) கொதித்துப்போய் புகாரளித்துள்ளது. “அப்போது சுபாஸ் சொன்னது பொய்யா, அல்லது இப்போது சொல்வது பொய்யா? சுபாஷ் சந்திரா ஏதோ ஒரு இடத்தில் பெரிய பொய் சொல்லி உள்ளார். அதைத் தோண்டித் துருவி விசாரிக்கப் போகிறோம் என சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக இறங்கி உள்ளனர்.
இதையடுத்து சுபாஷ் மீது கிரிமினல் சதி, ஏமாற்று வேலை, நம்பிக்கை மோசடி என சுபாஷ் சந்திரா உட்பட 3 நிறுவனங்கள் மற்றும் அவர்களின் சகாக்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அதேபோல் இந்த எஃப்.ஐ.ஆரில் வசந்த் சாகர் பிராப்பர்ட்டீஸ், அதன் இயக்குனர் பங்கஜ் சுரோலியா, பான் இந்தியா இன்ஃப்ராஸ்ட்ரக்சர், டிஜிட்டல் சப்ஸ்கிரைபர் மேனேஜ்மென்ட் மற்றும் அதன் இயக்குனர் அமிஷ் பாண்டியா, ஸ்பிரிட் இன்ஃப்ராபவர் மற்றும் அதன் இயக்குனர் ராஜீவ் தோலாக்கியா மற்றும் இன்னும் சிலரையும் வழக்கில் சேர்த்துள்ளது.
அமலாக்கத்துறையும் பின்னணி என்ன என்று கண்காணிக்க தொடங்கி உள்ளது. ஏற்கனவே ரூ.22,006 கோடி நிலுவைக்கு வெறும் ரூ.6.25 கோடியை இழப்பீடாகத் தருவதாகச் சொன்ன சந்திராவின் திட்டத்திற்கு NCLT இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், தப்பி ஓடாதபடி அனைத்துக் கதவுகளும் அடைக்கப்பட்டுவிட்டது.இனி அவர் சிறைக்கு போவது உறுதி என்பதாக நிலைமை மாறி உள்ளது.

