ஜோகூர் மாநிலம் சுங்கை கெலாம்புவில் உள்ள தனது பாட்டியின் வீட்டிற்கு அருகே, நேற்று காலை இரண்டு வயது சிறுமி ஒருவரை தெருநாய்கள் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்த புகார் பெறப்பட்டதை உறுதிப்படுத்திய பத்து பஹாட் (Batu Pahat) காவல் துறைத் தலைவர் ஷாருல்அனுவார் முஷதாத் அப்துல்லா சானி, ‘குழந்தைகள் சட்டம் 2001’-ன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்ததாக ‘பெரித்தா ஹரியான்’ (Berita Harian) செய்தி வெளியிட்டுள்ளது.
சிறுமி நூர் ஹைரா வதிகா ஹசிமி (Nur Haira Watikah Hazimi) மற்றும் அவரது உடன்பிறப்புகள் பாட்டியின் வீட்டில் விடப்பட்ட பிறகு, காலை 7 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகச் சிறுமியின் பாட்டி டார்லிண்டா டார்லிஸ் (Darlinda Darlis) கூறியதாக அந்த மலாய் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தான் குளிக்கச் சென்றபோது நூர் ஹைராவை மற்ற குழந்தைகளுடன் விட்டுச் சென்றதாகவும், ஆனால் சிறிது நேரத்தில் அந்த இரண்டு வயது சிறுமியைக் காணவில்லை என்றும், வீட்டின் முன் கதவு திறந்திருப்பதை தான் கவனித்ததாகவும் அவர் கூறினார்.
பின்னர், வீட்டின் வெளியே தனது பேத்தியை சுமார் ஐந்து நாய்கள் தாக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்ததாக அவர் தெரிவித்தார். இதில் அச்சிறுமிக்குத் தலை மற்றும் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. தனது மகன் உடனடியாகச் சிறுமியை சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகவும், அங்கு அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் (red zone) அனுமதிக்கப்பட்டு, மருத்துவ ரீதியாகத் தூண்டப்பட்ட மயக்க நிலையில் (induced coma) வைக்கப்பட்டதாகவும் டார்லிண்டா கூறினார்.
அதன்பிறகு சிறிது நேரத்திலேயே, காயங்களின் தீவிரத்தன்மை காரணமாக நூர் ஹைரா ஜோகூர் பாருவில் உள்ள சுல்தானா அமினா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் என்று அவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள செம்பனைத் தோட்டத்தில் காட்டுப்பன்றி வேட்டையாடியவர்களால் அந்தத் தெருநாய்கள் கைவிடப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுவதாக டார்லிண்டா கூறினார்.



