HD ஹூண்டாய் நிறுவனத்திற்கு ஆந்திர அரசு கொடுத்த ஆஃபர்.. தூத்துக்குடியில் நிலம் கையகப்படுத்துவதில் தாமதமா?
தென்னிந்திய மாநிலங்கள் மத்தியில் முதலீட்டை ஈர்ப்பதில் காலம் காலமாக இருக்கும் போட்டி, தற்போது மற்ற மாநிலங்களுக்கு வந்த முதலீடுகள் பறிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. தூத்துக்குடியில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்த தென் கொரிய நாட்டை சேர்ந்த HD ஹூண்டாய் (HD Hyundai) நிறுவனத்தின் பிரமாண்ட கப்பல் கட்டும் தளம் திட்டத்தை, ஆந்திரப் பிரதேசத்திற்கு மாற்ற அம்மாநில அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இதுமட்டும் அல்லாமல் ஆந்திர அரசு தூத்துக்குடியை காட்டிலும் சாதகமான தளங்கள் தங்களிடம் உள்ளதாக கூறி ஹெச்டி ஹூண்டாய் நிறுவனத்தை ஈர்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளையில் ஹெச்டி ஹூண்டாய் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் தூத்துக்குடியில் முக்கியமான ஆய்வு கூட்டத்தில் உள்ளனர்.

தூத்துக்குடி திட்டத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்ய ஹெச்டி ஹூண்டாய் நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் குழு வஉசி சிதம்பரனார் துறைமுக அதிகாரிகள், தமிழ்நாடு அரசு அதிகாரிகள் அடங்கிய முக்கிய குழுவுடன் கடந்த 2 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
ஹெச்டி ஹூண்டாய் நிறுவனத்தின் கப்பல் கட்டுமான தளம் வஉசி சிதம்பரனார் துறைமுகத்தை ஓட்டி அமைக்கப்பட உள்ளது, சுமார் 2.4 கிலோமீட்டர் வாட்டர்பிரென்ட், 5 மீட்டர் டிரப்ட் உடன் சுமார் 2050 ஏக்கர் நிலத்தில் அமைக்க திட்டமிட்டப்பட்டு வருகிறது. தற்போது இதில் 1500 ஏக்கர் நிலம் தயாராக இருக்கும் நிலையில் எஞ்சியுள்ள நிலத்தை கைப்பற்றுவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் 300 ஏக்கர் பரப்பளவிலான உப்பளம் இடத்தை கைப்பற்றுவதில் புதிய சவால் உருவாகியுள்ளது. ஹெச்டி ஹூண்டாய் திட்டம் அமைப்பதற்காக மாநில, மத்திய அரசுகள் பல்வேறு கட்ட ஒப்புதல்கள், நடைமுறைகளை முடித்துள்ள நிலையில்…

தற்போது ஆந்திர அரசின் மூத்த அமைச்சரான நரலோகேஷ் ஜூன் மாதம் சியோல் பயணத்தில் ஹெச்டி ஹூண்டாய் நிறுவனத்தை தயாராக இருக்கும் 1650 ஏக்கர், 6 கிலோ SeaFront போன்ற கப்பல் கட்டுமானத்திற்கு தயாராக இகுக்கும் வகையில் அமைந்துள்ள காக்கிநாடா துறைமுகத்தில் அமைக்கலாம் என பரிந்துரை செய்துள்ளார்.
ஆந்திர அரசு ஹெச்டி ஹூண்டாய் நிறுவனத்திற்கு முக்கியமாக சொல்லியது என்னவென்றால், இக்கப்பல் கட்டுமான தளத்தை தூத்துக்குடியில் அமைத்தால் ஆரம்பம் முதல் கட்ட வேண்டும், ஆனால் காக்கிநாடா கேட்வே துறைமுகத்தில் கப்பல் கட்டுமானத்திற்கு ரெடிமேடாக கட்டமைப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. இதேவேளையில் தூத்துக்குடியில் இடத்தை கைப்பற்றுவதற்காக தமிழ்நாடு அரசு தடுமாறி வருகிறது.
ஆந்திர அரசின் ஆஃபர், முதலீடு, நிலம் கைப்பற்றுதலில் தாமதம் போன்ற பல்வேரு பிரச்சனைக்கு மத்தியில் இதேவேளையில் கொரியாவின் சர்வதேச பொருளாதார கொள்கை நிறுவனத்தின் (KIEP) இந்தியா மற்றும் தெற்காசியா பிரிவுத் தலைவர் க்யுங்ஹூன் கிம் (Kyunghoon Kim) முக்கியமான விளக்கத்தை கொடுத்துள்ளார்.
ஹெச்டி ஹூண்டாய் இந்தியாவில் கப்பல் கட்டுமானத்தை அமைக்க திட்டமிடும் போது தங்களுடைய அமைப்பு பரிந்துரை செய்த ஓரே இடம் தூத்துக்குடி மட்டுமே என்றும், இது வெறும் மாநில அரசு கொடுக்கும் சலுகைகள் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு அல்லது நீண்ட கால உறவு, வளர்ச்சி, வெளிநாடுகள் உடனான இணைப்பு, அரசியல் நிலைதன்மை, ஊழியர்கள் திறன் போன்ற பல்வேறு காரணிகள் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு என க்யுங்ஹூன் கிம் தெரிவித்தார். இதேபோல் கொரிய நிறுவனங்களுக்கு தமிழ்நாட்டுடன் நீண்ட கால தொடர்ப்பும், நட்புறவும் உள்ளது என்பதால் நாங்கள் தூத்துக்குடியை மட்டும் பரிந்துரை செய்தோம் என தெரிவித்தார்.
இதற்கு பின்பு தான் இந்திய அரசு நான்காவது தூணாக Maritime Package-ஐ அறிவித்தது. இதில் தமிழ்நாடு முன்கூட்டியே ஆலோசனை செய்து அதற்கான பணிகளையும், முயற்சிகளையும் மேற்கொண்டது மிகவும் பாராட்டுக்குரிய எனவும் க்யுங்ஹூன் கிம் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்தார்.

