ஓசூர் டைடல் பார்க் நிலைமை என்ன..? பரந்தூர் போல் ரத்து செய்யப்பட்டதா..? நெட்டிசன்களின் பரபர கேள்வி..!
பெங்களூருக்கு போட்டியாக ஓசூரை ஐடி நகரமாக மாற்றும் நோக்கில் திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட மாபெரும் TIDEL Park திட்டம் தற்போது எந்த நிலையில் இருக்கிறது? கட்டுமானப் பணிகள் தொடங்க வேண்டிய நேரத்தில் இந்த முக்கியமான திட்டம் தாமதமாகி வருவதால் மக்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்து வருகிறது.
இதேவேளையில் விஜய் தலைமையிலான அரசு முந்தைய அரசின் பல்வேறு திட்டங்களை மறுஆய்வு, ஆலோசனை என பல்வேறு காரணங்கள் கூறி முடக்கி வைத்துவரும் வேளையிலும்.. ஏஐ துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் இந்த சூழ்நிலையிலும் ஓசூர் டைடல் பார்க் திட்டம் முடக்கப்பட்டு உள்ளதாக தகவல் சமுக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

ஓசூரில் ஐடி நிறுவனங்கள், Global Capability Centre அதாவது GCC, டெக் நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் மாவட்டத்திற்கு ஒரு TIDEL Park என்ற வகையில் ஓசூரிலும் டைடல் பார்க் அமைக்க திட்டமிடப்பட்டது.
குறிப்பாக பெங்களூரின் IT துறை வளர்ச்சியின் மேஜிக்கை ஓசூருக்கும் கொண்டு வர வேண்டும் என்பதே ஓசூர் டைடல் பார்க் திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.
முந்தைய திமுக அரசு ஓசூர்-தளி சாலையில், ஆதிவாடி மைதானம் அருகே சுமார் 9.2 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் சுமார் 5.5 லட்சம் சதுர அடி அலுவலக இடத்துடன் இந்த டைடல் பார்க் திட்டம் உருவாக்கப்பட்டது. G+9 தளங்கள் என பிரம்மாண்ட கட்டமைப்பாக சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் உருவாக்கப்பட்டது.
டைடல் பார்க் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு ஏற்கெனவே டெண்டர் பணிகளை தொடங்கியிருந்த நிலையில் தற்போது முடங்கியுள்ளது. தற்போது வரையில் டைடல் பார்க் கட்டுமானப் பணிகள் நடைபெறும் நிலையை எட்டவில்லை.
மேலும் டைடல் பார்கிற்கான திட்ட வடிவமைப்பு உள்ளிட்ட ஆரம்பகட்ட பணிகள் முடிவடைந்து தயாராக இருந்தாலும், டெண்டர் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தற்போது எவ்விதமான முன்னேற்றமும் இல்லாமல் முடங்கி நிற்கிறது.
ஆனால் விஜய் தலைமையிலான அரசு ஓசூர் டைடல் பார்க் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டது என இன்னும் அறிவிக்கவில்லை என்பதால் இத்திட்டம் மீதான நம்பிக்கை இன்னும் உள்ளது.
ஓசூர் ஏற்கெனவே ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ், MSME உற்பத்தித் துறைகளில் முக்கிய பகுதியாக வளர்ந்து வருகிறது. இதனுடன் IT மற்றும் GCC துறையையும் இணைத்தால், ஓசூரின் பொருளாதார வளர்ச்சி சென்னைக்கு இணையாக செல்லும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
