Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: இந்திய ஒருநாள் அணியில் இருந்து ஜாம்பவான் வீரரான ரோகித் சர்மாவை நீக்க தேர்வுக் குழு முடிவு எடுத்துவிட்டதாகவும், அதற்கு ரோகித் சர்மா ஒப்புக்கொண்டு விட்டதாகவும் தெரிய வந்துள்ளது. இப்படியான சூழலில் பிசிசிஐ நிர்வாகிகள் தலைமையில் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் ஆலோசனை கூட்டம் இன்று நடக்கவுள்ளது.
இந்திய அணியின் கவனம் அடுத்த ஆண்டு தென்னாப்பிரிக்கா மண்ணில் நடக்கவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை பக்கம் திரும்பி இருக்கிறது. சுப்மன் கில் தலைமையில் இந்திய அணியை கட்டமைக்க வேண்டும் என்பதில் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தீவிரமாக இருக்கிறார். இப்படியான சூழலில் மும்பையில் இன்று பிசிசிஐ ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர், கேப்டன் சுப்மன் கில், டி20 அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி அடைந்த தோல்விகளுக்கான காரணங்கள் குறித்தும் பேசப்பட இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் எதிர்காலம் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. இதில் விராட் கோலியை இந்திய ஒருநாள் அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற எண்ணம் யாரிடமும் இல்லை. பேட்டிங் மற்றும் ஃபிட்னஸ் இரண்டிலும் விராட் கோலி ஸ்கோர் செய்வதால், அவருக்கு எதிராக யாரிடமும் இந்த கருத்தும் இல்லை.
ஆனால் ரோகித் சர்மாவை உலகக்கோப்பை தொடருக்கு தேர்வு செய்வதில் அனைவரிடமும் தயக்கம் இருக்கிறது. ஏற்கனவே இங்கிலாந்து தொடரின் போதே ரோகித் சர்மாவிடம் இதுதொடர்பாக தேர்வுக் குழு பேசி இருக்கிறது. அப்போது தேர்வுக் குழு மீது கோபம் அடைந்த ரோகித் சர்மா, இறுதியாக அந்த முடிவை ஏற்றுக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது.
அதேதான் ஜடேஜா விஷயத்தில் நடந்துள்ளது. அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரில் ஒருவரையே உலகக்கோப்பை தொடரில் விளையாட வைக்க கில் மற்றும் கம்பீர் கூட்டணி விரும்புகிறது. இதனால் பிசிசிஐ ஆலோசனை கூட்டத்தில் இரு வீரர்கள் குறித்தும் இறுதி முடிவு எடுக்கப்பட்டு, அவர்களிடம் தகவல் அளிக்கப்பட உள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ளன.

