கோலாலம்பூர்:
கோலா சிலாங்கூர் மற்றும் கிள்ளான் பகுதிகளில் நேற்று மேற்கொள்ளப்பட்ட ‘ஓப் சம்சங் ஜாலானான்’ மற்றும் ‘ஒப் பெர்செபாடு அம்பாங் மெர்டேகா’ ஆகிய இரு வேறு சோதனைகளில் மொத்தம் 262 மோட்டார் சைக்கிள்கள் பரிசோதிக்கப்பட்டு, பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக 155 சம்மன்கள் வழங்கப்பட்டன.
கோலா சிலாங்கூர் மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ரிண்டெண்டன் அஜஹாருடின் தாஜூடின் கூறுகையில், மாலை 4 மணியளவில் தொடங்கி சுமார் 7 மணி நேரம் நீடித்த இச்சோதனை நடவடிக்கை முக்கியமாக ‘பன்தாய் ரெமிஸ்’, ஜெரம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. மோட்டார் சைக்கிள் சாகசங்களில் ஈடுபடுவதற்கும், மாற்றி அமைக்கப்பட்ட புகை போக்கி குழாய்கள் கொண்ட மோட்டார் சைக்கிள்களில் இளைஞர்கள் ஒன்று கூடுவதாகவும் கிடைத்த தகவலின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த 7 மணி நேர சோதனையில், 140 வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டன, 90 சம்மன்கள் விநியோகிக்கப்பட்டன மற்றும் 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் சொன்னார்.
ஓட்டுநர் உரிமம் இல்லாதது, காப்பீடு இல்லாதது, சாலை வரி (Road tax) மற்றும் பதிவு எண் இல்லாதது, பக்கவாட்டுக் கண்ணாடிகள் (Rearview mirror) இல்லாதது, தலைக்கவசம் அணியாதது, புகைப்போக்கியை மாற்றி அமைத்தது மற்றும் ‘L’, ‘P’ ஸ்டிக்கர்களை ஒட்டாதது போன்ற குற்றங்களுக்காக இந்தச் சம்மன்கள் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மற்றொரு சம்பவத்தில், கிள்ளான் பெர்சியாரான் ராஜா மூடா மூசாவில் நடைபெற்ற சோதனையில் 122 மோட்டார் சைக்கிள்கள் சோதனையிடப்பட்டு, 65 சம்மன்கள் விநியோகிக்கப்பட்டதாக கிள்ளான் தெற்கு மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் (ACP) லிம் ஜிட் ஹுய் தெரிவித்தார்.
இரவு 12.01 மணிக்குத் தொடங்கிய இச்சோதனையில், 21 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதில் 2 நபர்கள் மதுபானம் அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக (Section 45A(1) Road Transport Act 1987) கைது செய்யப்பட்டனர்.
ஓட்டுநர் உரிமம் இல்லாதது, காலாவதியான சாலை வரி, வாகனக் கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் பதிவு எண் விதிமீறல்கள் போன்றவை இங்கு பதிவு செய்யப்பட்டன.
தேசிய தினக் கொண்டாட்டங்களின் போது பொதுமக்களின் பாதுகாப்பையும் போக்குவரத்து சீரமைப்பையும் உறுதி செய்யும் வகையில் அதிகாலை 6.30 மணி வரை இச்சோதனை நடவடிக்கை தொடர்ந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.



