International
oi-Vigneshkumar
காத்மாண்டு: நேபாளத்தை உலுக்கிய வெள்ளம் மிக மோசமான பேரழிவை ஏற்படுத்தியது. வெள்ளம் பாய்ந்த பகுதியில் இருந்த அனைத்துமே மொத்தமாக அடித்து செல்லப்பட்டது. இருப்பினும், இந்த வெள்ளத்திலும் அசராமல் ஒரு பச்சை கலர் வீடு மட்டும் அப்படியே இருந்தது. இது பலருக்கும் வியப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த ஒரு வீடு மட்டும் மற்ற விஷயங்களில் இருந்து எஸ்கேப் ஆனது எப்படி என்பது தொடர்பான தகவல்களை வல்லுநர்கள் பகிர்ந்துள்ளனர்.
நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் வீடுகள், பாலங்கள், சாலைகள் என பல்வேறு கட்டமைப்புகள் சில நிமிடங்களிலேயே அடித்து செல்லப்பட்ட நிலையில், பச்சை நிறத்தில் இருந்த ஒரு சிறிய வீடு மட்டும் வெள்ளத்தின் வேகத்தை தாக்குப்பிடித்து அப்படியே நின்றது. வீட்டைச் சுற்றிலும் சேறும், தண்ணீரும், ராட்சத பாறைகளும், வேரோடு சாய்ந்த மரங்களும் அடித்து செல்லப்பட்ட போதிலும், அந்த வீடும் உள்ளே இருந்த குடும்பத்தினரும் உயிருடன் மீட்கப்பட்டனர்.

பச்சை வீடு
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையில், அந்த வீடு மட்டும் எப்படி இவ்வளவு பெரிய வெள்ளத்திலும் இடிந்து விழாமல் தாக்குப்பிடித்தது என்ற விவாதம் எழுந்தது. ஆனால் இது வெறும் அதிர்ஷ்டம் மட்டுமல்ல என்கிறார்கள் கட்டுமான நிபுணர்கள். அந்த வீட்டின் கட்டுமான முறையும், அது அமைந்திருந்த இடமும் முக்கிய காரணங்களாக இருந்துள்ளன.
நேபாளத்தின் இமயமலை பள்ளத்தாக்குகளில் உள்ள பெரும்பாலான வீடுகள் கற்களை கொண்டு கட்டப்பட்டவை. அவற்றில் பல வீடுகளில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் கட்டமைப்பு இருக்காது. இது போன்ற கட்டுமானங்கள் செங்குத்தான எடையை தாங்கும் வகையில் இருக்கலாம். ஆனால் பக்கவாட்டில் இருந்து மிக பெரிய அளவில் தண்ணீர் மற்றும் சேறு மோதும்போது அவை எளிதில் சேதமடையக்கூடும்.
கான்கரீட் கட்டுமானம்
அதேநேரம் இந்த பச்சை கலர் வீடு இந்த விஷயத்தில் வேறுபட்டதாக இருந்துள்ளது. அந்த வீடு கான்கிரீட் கட்டமைப்பில் கட்டப்பட்டிருந்ததாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். அதாவது கட்டிடத்தின் தூண்கள், பீம்கள் மற்றும் அடித்தளம் ஆகியவற்றை தொடர்ச்சியாக இணைக்கும் வகையில் இரும்பு கம்பிகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இதனால் ஒட்டுமொத்த கட்டிடமும் தனித்தனி பகுதிகளாக இல்லாமல், ஒரே வலுவான கட்டமைப்பாக செயல்பட்டுள்ளது.
காரணங்கள்
வெள்ளத்தில் சேறும் தண்ணீரும் மிக பெரிய வேகத்தில் வீட்டை தாக்கியபோது, அந்த பக்கவாட்டு அழுத்தத்தை கான்கிரீட் கட்டமைப்பு உள்வாங்கிவிட்டது. இதுவே வீடு இடிந்து விழாமல் இருக்க முக்கிய காரணமாக இருந்திருக்கலாம். இன்னொரு முக்கிய காரணமும் இருந்துள்ளது. அந்த வீடு வெள்ளத்தின் நேரடி பாதையில் அமைந்திருக்கவில்லை. இதுவே மிக முக்கியமான காரணமாகும்.
சேறு, பாறைகள் மற்றும் தண்ணீர் கலந்த வெள்ளத்தின் மிக பெரிய பாறைகள் பொதுவாக மையப்பகுதியில் அடித்து செல்லப்படும். ஆனால், இந்த வீடு அந்த பிரதான பாதையில் இருந்து சற்று விலகியும், சற்றே உயரமான இடத்திலும் இருந்துள்ளது. இதனால் வெள்ளம் வீட்டை நேரடியாக மோதுவதற்கு பதிலாக அதன் இருபுறமும் பிரிந்து சென்றுள்ளது. மேலும் இந்த வீடு சிறியதாக இருந்ததால்.. தண்ணீர் மற்றும் சேற்றின் ஓட்டம் இருபுறமும் பிரிந்து செல்ல முடிந்துள்ளது.
காப்பாற்றிய சேறு
மேலும், வெள்ளத்தால் சேறு அடித்து வந்த நிலையில், அது வீட்டை சுற்றி படிந்துவிட்டது. அது இயற்கையான தடுப்பு பாதை போல செயல்பட்டு, அடுத்தடுத்த வெள்ள அலைகளின் தாக்கத்தையும் திசை திருப்பியதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
நேபாள வெள்ளத்தில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 3,000க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். இந்த நிலையில், வெள்ளத்தின் நடுவே குடும்பத்துடன் இந்த பச்சை வீட்டில் பதுங்கி உயிர் தப்பிய சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

