LPG சிலிண்டர் முதல் கார் விலை வரை: செப்.1 முதல் அமலுக்கு வரும் மேஜர் மாற்றங்கள்..!!
2026ஆம் ஆண்டு தொடங்கி 8 மாதங்கள் முடிந்து 9ஆவது மாதம் தொடங்க போகிறது. செப்டம்பர் மாதத்தில் நம் பட்ஜெட்டை பதம் பார்க்கும் முக்கியமான மாற்றங்கள் நடைமுறைக்கு வர இருக்கின்றன. அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சிலிண்டர் விலை: ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்படும். அந்த வகையில் நாளை செப்டம்பர் 1ஆம் தேதி உலக சந்தையில் கச்சா எண்ணெய், எல்பிஜி விலை நிலவரத்துக்கு ஏற்ப சிலிண்டர் விலை மாற்றப்படும். எனவே இண்டேன், பாரத் கெஸ், ஹெச்பி கேஸ் வாடிக்கையாளர்கள் கவனமாக செய்திகளை தெரிந்து கொள்வது நல்லது. ஒரு வேளை சிலிண்டர் விலை உயரலாம் அல்லது குறையலாம், சில சமயம் விலை மாற்றமில்லாமலும் இருக்கலாம். இந்த விலை மாற்றம் நம் வீட்டு பட்ஜெட்டில் தாக்க்த்தை ஏற்படுத்தும் ஒன்றாகும்.

போர்டிங் பாஸ் விதிகள்: செப்டம்பர் 1 முதல், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் சர்வதேச பயணிகளுக்கு ஒரு பெரிய மாறுதல் அமலுக்கு வந்துள்ளது. இனி விமான நிலையங்களில் உள்ள இமிகிரேஷன் கவுன்ட்டர்களில் பயணிகளின் போர்டிங் பாஸ்களில் ஸ்டாம்பிங் எனப்படும் முத்திரை குத்துவது நிறுத்தப்படும். இதற்கு மாற்றாக, பயணிகள் தங்களது போனில் எலக்ட்ரானிக் போர்டிங் பாஸ் அல்லது அதன் அச்சிடப்பட்ட நகலை காட்டி இமிகிரேஷன் நடைமுறைகளை எளிதாக முடித்து கொள்ளலாம். இதனால் விமான நிலைய பயண நடைமுறைகள் மேலும் எளிமையாக்கப்பட்டு, பயணிகளுக்கு நேரம் மிச்சமாகும்.
எல்பிஜி சிலிண்டர் e-KYC கெடு: வீட்டு உபயோக கேஸ் இணைப்புகளை பெற்றுள்ள நுகர்வோருக்கான e-KYC சரிபார்ப்பை முடிப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31 உடன் நிறைவடைய உள்ளது. இந்த கெடுவை தவற விடும் வாடிக்கையாளர்கள், அடுத்த மாதம் முதல் சிலிண்டர் புக் செய்ய முடியாமல் போகலாம். மேலும் மானியம் கிடைப்பதும் நிறுத்தப்படும்.
வருமான வரி கணக்கு தாக்கல் : வணிகம் அல்லது தொழில் மூலம் வருமானம் ஈட்டும் குறிப்பிட்ட வகை வரி செலுத்துபவர்களுக்கான ITR தாக்கல் செய்யும் காலக்கெடு ஆகஸ்ட் 31, 2026-க்குள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.எனவே இன்றைக்குள் வருமான வரி தாக்கல் செய்யாதவர்கள் செப்டம்பரில் அபராதத்துடன் வரி கணக்கு தாக்கல் செய்யலாம்.
கார்கள் விலை: புதிதாக கார் வாங்க திட்டமிட்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு செப்டம்பர் மாதம் சற்று நிதி சுமையை ஏற்படுத்தலாம். பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனப் பிரிவு தனது கார்கள் மற்றும் எஸ்யூவி விலைகளை செப்டம்பர் 1 முதல் 25,000 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது.
இந்த விலை உயர்வானது பெட்ரோல்,டீசல் வாகனங்கள் (ICE) மற்றும் எலக்ட்ரானிக் வாகனங்கள் (EVs) என நிறுவனத்தின் அனைத்து பிரிவு கார்களுக்கும் பொருந்தும். இதே போல பல நிறுவனங்களும் கார் விலைகளை உயர்த்த உள்ளன.

